சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=9IAdluR7a9Y   Add audio link Add Audio

நிறைக்க வாலியள் அல்லள், இந் நேரிழை;
மறைக்க வாலியள் அல்லள், இம் மாதராள்-
பிறைக்கு அவாவிப் பெரும்புனல் ஆவடு-
துறைக் கவாலியோடு ஆடிய சுண்ணமே.

1
பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும் , திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண் ; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையவளுமல்லள் .

தவளமாமதிச் சாயல் ஓர் சந்திரன்
பிளவு சூடிய பிஞ்ஞகன், எம் இறை,
அளவு கண்டிலள்; ஆவடுதண்துறைக்
களவு கண்டனள் ஒத்தனள்-கன்னியே.

2
இக்கன்னி , வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினைச் சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டிலளேனும் , திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக் கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள் .

பாதி பெண் ஒருபாகத்தன்; பல்மறை
ஓதி; என் உளம் கொண்டவன்; ஒண் பொருள்
ஆதி-ஆவடுதண்துறை மேவிய
சோதியே! சுடரே! என்று சொல்லுமே.

3
இப்பெண் , தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும் , பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும் , ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும் , திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும் , சுடரே என்றும் சொல்லும் இயல்பினள் .

கார்க் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன்;
வார்க்கொள் மென்முலை சேர்ந்து இறுமாந்து, இவள்
ஆர்க் கொள் கொன்றையன்; ஆவடுதண்துறைத்
தார்க்கு நின்று இவள் தாழுமா காண்மினே!

4
இப்பெண் , கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும் , கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள் ; காண்பீராக .

கருகு கண்டத்தன், காய் கதிர்ச் சோதியன்,
பருகு பால் அமுதே எனும் பண்பினன்,
அருகு சென்று இவள், ஆவடுதண்துறை
ஒருவன் என்னை உடைய கோ என்னுமே.

5
இப்பெண் , கருத்த கண்டத்தை உடையவனும் , கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும் , பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள் . அல்லளாயினும் , அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் ` என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே ` என்று கூறும் இயல்பினள் .
Go to top

குழலும், கொன்றையும், கூவிளம், மத்தமும்,
தழலும், தையல் ஓர்பாகமாத் தாங்கினான்;
அழகன்; ஆவடுதண்துறையா! எனக்
கழலும், கைவளை காரிகையாளுக்கே.

6
இவ்வழகுடைய பெண் , கொன்றை மலர்களும் , கூவிளந்தளிர்களும் , ஊமத்தமலர்களும் சூடிய சடையும் , தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால் , கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள் .

பஞ்சின் மெல் அடிப் பாவை ஓர்பங்கனைத்
தஞ்சம் என்று இறுமாந்து, இவள் ஆரையும்
அஞ்சுவாள் அல்லள்; ஆவடுதண்துறை
மஞ்சனோடு இவள் ஆடிய மையலே!

7
இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள , புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால் , பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி , வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள் .

பிறையும் சூடி, நல் பெண்ணொடு ஆண் ஆகி, என்
நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன்;
அறையும் பூம்பொழில் ஆவடுதண்துறை
இறைவநென்னை உடையவன் என்னுமே.

8
இப்பெண் , பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும் , மேகங்களும் , வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே , என் கற்பினையும் , உள்ளத்தினையும் , பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள் .

வையம் தான் அளந்தானும் அயனும் ஆய்
மெய்யைக் காணல் உற்றார்க்கு அழல் ஆயினான்;
ஐயன்; ஆவடுதண்துறையா! என,
கையில் வெள்வளையும் கழல்கின்றதே.

9
உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும் , பிரமனும் ஆகிய இருவரும் மெய்ப்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே ! ஐயனே ! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின .

பக்கம் பூதங்கள் பாட, பலி கொள்வான்;
மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான்;
அக்கு அணிந்தவன் ஆவடுதண் துறை
நக்கன் என்னும், இந் நாண் இலி; காண்மினே!

10
பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும் , அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண் , மீண்டும் , பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும் , ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும் , அக்கமாலைகள் அணிந்தான் என்றும் . திருஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப் புகழ்ந்தவண்ணம் இருப்பாள் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவாவடுதுறை
3.004   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.056   திருநாவுக்கரசர்   தேவாரம்   மா-இரு ஞாலம் எல்லாம் மலர்
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
4.057   திருநாவுக்கரசர்   தேவாரம்   மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும்
Tune - கொல்லி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
5.029   திருநாவுக்கரசர்   தேவாரம்   நிறைக்க வாலியள் அல்லள், இந்
Tune - திருக்குறுந்தொகை   (திருவாவடுதுறை )
6.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
6.047   திருநாவுக்கரசர்   தேவாரம்   திருவே, என் செல்வமே, தேனே,
Tune - திருத்தாண்டகம்   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.066   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மறையவன்(ன்) ஒரு மாணி வந்து
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
7.070   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கங்கை வார்சடையாய்! கணநாதா! காலகாலனே!
Tune - தக்கேசி   (திருவாவடுதுறை மாசிலாமணியீசுவரர் ஒப்பிலாமுலையம்மை)
9.006   சேந்தனார்   திருவிசைப்பா   சேந்தனார் - திருவாவடுதுறை
Tune -   (திருவாவடுதுறை )

This page was last modified on Thu, 06 Aug 2026 02:07:49 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group