வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!
|
1
|
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ? | |
கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!
|
2
|
கற்றவர்கள் பெருகிய , கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உறையும் , நெற்றியில் கண்ணையுடைய எம்பெருமானாரே ! வில்லைத் தாங்கிய கை , வேல் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதி பாகத்தில் உள்ள கையே . நல்ல கால்களால் வில்லை மிதித்து அதற்கு நாணை ஏற்றிய கை உம் பாகத்தில் உள்ளகையே . இவ்வாறாகப் பகைவருடைய மும்மதில்களை அழித்த வீரம் உம்முடையது என்று கூறுவதன் காரணத்தை அடியேற்குத் தெரிவியுங்கள் . | |
தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!
|
3
|
தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல்நாகைக் காரோணனே ! எங்கள் சங்கரனே ! உன் திருப் பெயரை முன்நின்று துதித்து நமசிவாய என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லும் பேற்றினை நல்குவாயாக . | |
பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!
|
4
|
உப்பங்கழிவழியே கடலின் வெள்ளநீர் பாயும் கடல் நாகைக் காரோணனே ! எங்கள் தேவனே ! பழியான வழிகளிலே வாழ்க்கையை நடத்திய தீவினையாளர்களான , தலைமயிரை வலியப் போக்கும் மூர்க்கர்களான , சமணர்கள் சொற்களைக் கேட்டு அவற்றின் வழியிலே வாழ்ந்து அழிந்து போகக்கூடிய அடியேனை அழியாதபடி பாதுகாத்து உனக்கு அடியவனாகக் கொண்டாய் . வழிவழியாக அடியேன் உனக்கு அடிமையாகும் முறைமை யாது ? அதனை அடியேற்கு அருளுவாயாக . | |
செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.
|
5
|
சிவந்த பவளம் போன்ற வாயையும் கரிய இருகண்களையும் , வெள்ளிய பற்களையும் , தேன்போன்ற இனிய சொற்களையும் உடைய இளைய மகளிர் வந்து வலம் செய்து சிறந்த கூத்து நிகழ்த்துமாறு , செல்வம் மிகுந்ததும் , நறுமணம் வீசும் பொழில்களால் சூழப்பட்டதுமான கடலை அடுத்து அமைந்த நாகைக் காரோணத்தை என்றும் தியானிப்பவர்களைத் திருமகள் என்றும் நீங்காது இருப்பாள் . | |
| Go to top |
பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?
|
6
|
பனை மரத்தை ஒத்த துதிக்கையை உடைய மத யானையின் தோலைஉரித்த மேம்பட்ட சோதிவடிவினனே ! ஒலிக்கும் கடலால் ஒருபக்கம் சூழப்பட்ட நாகைக் காரோணத்தில் உறையும் எம் நெற்றிக் கண்ணனே ! இல்லறவாழ்க்கையை விடுத்து இரவில் உண்ணாத வலிய சமணர்களாகிய மூர்க்கர்திறத்து அடியேன் கொண் டிருந்த மயக்கத்தைப் போக்கி அடியேனை விரும்பி ஆட்கொண்ட உனக்கு அடியேன் விரும்பிக் கைமாறாகச் செய்வது யாது உள்ளது ? | |
சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!
|
7
|
சிறப்புமிக்க செல்வத்தை மிகுதியாக உடைய செம்பொன்மலை போன்றவனே ! மழையால் செழித்த சோலைகளால் சூழப்பட்ட கடல் நாகைக் காரோணனே ! கச்சணிந்த மென்மையான முலையை உடைய மகளிர் வந்து பிச்சையிடுமாறு வீடுதோறும் சென்று பிச்சை வாங்கி ஊர்களில் கிட்டும் பிச்சை உணவை உண்பது பொருத்தமான செயல் ஆகுமா ? சொல்வாயாக . | |
வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!
|
8
|
கப்பல்கள் நிறைந்த கடலை அடுத்த நாகைக் காரோணத்தில் உள்ள எம் தேவரே ! எங்கள் பெருமானாரே ! அடியேன் வேண்டிச் சொல்லும் செய்தி ஒன்று உள்ளது . அதனைத் திருச்செவி சார்த்தி அருளுவீராக . எங்கள் தலைவரே ! கங்கையைச் சடையுள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் . அந்தக் கள்ளச் செயலை மெதுவாகப் பார்வதிப் பிராட்டி அறிவாளானால் பொல்லாங்கு விளையும் என்பதைத் திருவுள்ளம் பற்றவேண்டும் . | |
கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே.
|
9
|
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை . | |