காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
1
|
காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது . | |
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
2
|
தொண்டர்கள் , வண்டுகள் தங்கும் கொன்றை , வன்னி , ஊமத்தை , ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி , பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது . | |
அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
3
|
எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் , அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய் , தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர் களுடைய பழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும் , தேவர்தலைவராய் , ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப் பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது . | |
ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!
|
4
|
கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு , திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து , எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய் , ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவ பெருமான் கையில் ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன . | |
கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.
|
5
|
திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமானார் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து , சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம் . | |
| Go to top |
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!
|
6
|
தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க , அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும் . | |
ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!
|
7
|
எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனை நாம் அறியோம் . முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அம்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளை உடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும் . | |
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
8
|
பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய் , மேலான இந்திரனும் திருத் தொண்டில் ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமா னுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் . | |
கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
9
|
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய் , எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும் , பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும் . | |
இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?
|
10
|
இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் . | |
| Go to top |