சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=Ja2zArm5ffk   Add audio link Add Audio

காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து
மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த
சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

1
காலையிலே எழுந்து நறுமணம் கமழும் தூய மலர்களைக் கொண்டு வந்து வானத்திலுள்ள தேவர்கள் விரும்பும் திருத்தலம் , நறுமண மலர்களால் வாசனை எங்கும் வீசும் சோலைகளை உடைய திருச்சோற்றுத்துறையாம் . அங்கு உகந்தருளியிருக்கும் சிவ பெருமானுடைய நீண்ட சடையில் வீற்றிருக்கும் பிறைச் சந்திரன்அல்லவோ எம்பெருமானுக்கு அழகிய அணிகலனாய் வாய்த்திருக்கின்றது .

வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

2
தொண்டர்கள் , வண்டுகள் தங்கும் கொன்றை , வன்னி , ஊமத்தை , ஒளிபொருந்திய பாம்பு இவைகள் வந்து பொருந்தித் தங்கும் சடையையுடைய பெருமான் திருவடிக்கண் தொண்டர்கள் வந்து பொருந்தி , பேரின்பக் கடலாடித் திளைக்கும் திருச்சோற்றுத்துறை எம்பெருமானுடைய சடையின்மேல் காட்சி வழங்கும் வெள்ளிய தலைமாலை அல்லவோ அவருக்கு அழகான அணிகலனாக வாய்த்திருக்கிறது .

அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான்,
விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன்,
துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல்
திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

3
எல்லோருடைய உள்ளப் பண்பையும் அளந்தறியும் முறைமை உடையவராய் , அடியவர்களுடைய மனத்தை உள்ளவாறு ஆராய்ந்து அறிந்து அவர்களை அடிமை கொள்பவராய் , தம்முடைய திருவடிப் பெருமையை உலகம் அறியச் செயற்படும் அடியவர் களுடைய பழைய வினைகளையும் புதியவினைகளையும் தீர்த்தருளும் , தேவர்தலைவராய் , ஒளிவீசும் காதணியை அணிந்திருக்கும் திருச்சோற்றுத்துறை எம் பெருமானுடைய சடை மேல் இருந்து மகிழ்ச்சியில் திளைக்கின்ற பிறைச்சந்திரன் அல்லவோ அப் பெருமானுக்கு அழகிய அணிகலனாக வாய்த்துள்ளது .

ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும்
பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே
சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார்
ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே!

4
கையிலே ஒளிபொருந்திய பாம்பினை ஆராய்ந்து எடுத்துக்கொண்டு , திருமாலாகிய காளையின்மீது இவர்ந்து , எல்லா விடத்தும் மானை ஏந்திய கையினை வீசிக்கொண்டு கூத்து நிகழ்த்துபவராய் , ஒன்றோடொன்று பிணைந்த சடைகளிடையே அடியார்கள் தம் கைகளால் அர்ப்பணித்த பூக்கள் தங்கும் சடைமுடியை உடைய சிவ பெருமான் கையில் ஏந்திய சூலம் மழு என்ற படைக் கருவிகள் அவருக்கு அழகிய அணிகலன்கள் ஆக அமைந்துள்ளன .

கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை
நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்;
ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும்,
சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே.

5
திருச்சோற்றுத்துறையில் உகந்தருளும் பெருமானார் கூற்றுவனை அழித்த செயலும் கொடிய புலித்தோல் ஆடையின் மேல் பாம்பினை இறுகக்கட்டித் திருநீற்றை முழுமையாக அணிந்து , சோற்றுத்துறைப் பெருமானது நீண்ட சடைமேல் விளங்கும் ஒப்பற்ற சந்திரன் அங்குள்ள கங்கையாற்றின் கரையிலே கிடந்து அவ்வாற்றின் அலை அலைக்கும்தோறும் தானலைந்தவாறிருக்கும் அழகையே நாம் அறிவோம் .
Go to top

வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார்
வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே!

6
தங்கள் வலிமையை மிகுத்துக் காட்டிக்கொண்டு நின்று கொல்லப் போவதாகப் பயமுறுத்தும் கொலைஞர்களாய அசுரர்கள் அங்ஙனம் துன்புறுத்தி வருத்தினாலும் அதனைப் பொருட்படுத்தாது தேவர் வந்து வணங்க , அவர்களோடு உரையாடிப் பயில்கின்ற சோற்றுத்துறைப் பெருமான் தமது கைவில்லைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை அவர்க்கு அழகிதாகும் .

ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக்
காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான்,
தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே!

7
எம் பெருமான் முப்புரங்களை அழிக்க முற்பட்ட காலத்தில் அவருக்குச் சேனைத்திரள் இல்லையோ உண்டோ என்பதனை நாம் அறியோம் . முப்புர அசுரர்களைக் கோபித்து வலிய வில்லை வளைத்தும் அம்பு எய்தும் அவர்களை அழித்துத் தேவர்களுடைய சோர்வைப் போக்கிய திருநீறு அணிந்த மேனியராகிய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமுடியின்மேற் பரவும் வெண்ணிற அலைகளை உடைய கங்கை எம்பெருமானுக்கு அழகிதாகும் .

அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

8
பகைவரான அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்து பரவிய விடத்தை உண்டு அதனைக் கழுத்திலே இருத்தவல்ல தேவர் தலைவராய் , மேலான இந்திரனும் திருத் தொண்டில் ஈடுபட்டுப் பயில்கின்ற திருச்சோற்றுத்துறைப் பெருமா னுடைய முடிமாலை போல விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்;
விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்;
சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல்
படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

9
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் நீலமணி நிறத்தினனாகிய திருமாலும் பிரமனும் அறியாத நீலகண்டராய் , எம்மை அடிமைகளாகக் கொள்பவராய்ச் சூரியன் ஒளி தம் திருமேனியில் பரவுமாறு கூத்து நிகழ்த்தும் திருச்சோற்றுத்துறை பெருமானுடைய சடைமீது இரத்தினமுள்ள படமுடையதாய்த் தங்கியிருக்கும் , பாம்பு அல்லவோ அவருக்கு அழகிதாகும் .

இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக்
கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த
துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?


10
இராவணனுடைய இருபது தோள்களும் தலைகளும் நெரியுமாறும் அவன் மனம் கலங்குமாறும் கால்விரலை ஊன்றி அவன் மனமதர்ப்பை அழித்த , ஒளி வீசும் மழுவை ஏந்திய திருச்சோற்றுத்துறைப் பெருமானுடைய நீண்ட சடைமேல் விளங்கும் பிறைச்சந்திரன் அல்லவோ அவருக்கு அழகிதாகும் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சோற்றுத்துறை
1.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
Tune - தக்கராகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகையம்மை)
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
Tune - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
4.085   திருநாவுக்கரசர்   தேவாரம்   காலை எழுந்து, கடிமலர் தூயன
Tune - திருவிருத்தம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
5.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
Tune - நாட்டைக்குறிஞ்சி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
6.044   திருநாவுக்கரசர்   தேவாரம்   மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே! முறைமையால்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
7.094   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
Tune - கௌசிகம்   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000