சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருப்புகலூர் - திருநேரிசை:காந்தாரம் அருள்தரு கருந்தார்க்குழலியம்மை உடனுறை அருள்மிகு அக்கினீசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=AZ_kpWQFf_Q   Add audio link Add Audio

பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

1
திருப்புகலூர் பெருமானே! பகையாயின அசுரர்களுடைய முப்புரங்களும் சிதறிச் சாம்பலாய் விழுமாறு தீக்கு இரையாக்கிய தேவர் தலைவரே! நல்வினை இல்லேனுடைய உடலிலே கிளைத்து அதனை நாடோறும் ஐம்பொறிகளும் செயற்படுத்ததனால் வருந்தி மயங்கி விட்டேன். யான் யாது செயற்பாலேன்?

மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

2
திருப்புகலூர்ப் பெருமானே! மை தீட்டப்பட்டுச் செவ்வரி பரந்து செழித்த ஒளிபொருந்திய பெண்களின் பார்வையாகிய வலையில் அகப்பட்டுக் கையிலே நெருப்பையும் சூலத்தையும் ஏந்தும் கடவுளாகிய உம்மைத் தியானிக்க இயலாதேனான் கோழை திரண்டு சாய்ந்து கழுத்தின் உட்புறத்தை அடைக்கும்போது என் உயிர் என்ன பாடுபடுமோ அறியேன்.

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), அது தருக, இது விடு! என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!

3
செந்நிற மேனியை உடைய திருப்புகலூர்ப் பெருமானே! தொண்ணூற்றாறு தத்துவ தாத்துவிகங்களால் அமைக்கப் பட்ட இவ்வுடம்பாகிய குடிலிலே தலைவர்களைப்போல ஆட்சிப் புரியும் ஐம்பொறிகளும் அவ்வப்போது தோன்றி அதனைக்கொடு, இதனை விடு என்று ஒருசேரத் துன்புறுத்தத் தொடங்கினால் அவற்றில் இருந்து தப்பிக் கடைத்தேறும் வழியை அடியேன் அறியமாட்டேன்.

பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

4
திருப்புகலூர்ப் பெருமானே! பொலிவில்லாத அழுக்கு உருவமான இவ்வுடம்பைப் பாதுகாத்துப் பொய்யான வழியையே மெய்வழியாகக் கருதிக் கீழ்மகனாகிய அடியேன் வழியல்லா வழியிலே வாழ்ந்தேன்! நெறிமுறையான செய்திகளை அறியும் ஆற்றல் இல்லேன். தேவர்கள் தலைவனே! அமுதமாகிய உன்னை மனத்தில் நிலையாகவைத்தற்குரிய யோகமுயற்சி உடையேன் அல்லேன். யாது செயற்பாலேன்?

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

5
திருப்புகலூர்ப் பெருமானே! வண்டுகளால் மொய்க்கப் பெறும் கூந்தலை உடைய பெண்கள்பால் அன்பு செலுத்தி, சிவானந்தக் களிப்பினார்கள் பாடும் பாடல்கள் நீங்காத கடவூர் வீரட்டம் என்னும் கோயிலிலுள்ள அமுதகடேசராம் பெருமானை நாள் தோறும் விருப்புற்று நினைக்காததும், தகுதியற்றதுமான நெஞ்சம் தெளிவு பெறாத அடியேன் யாது செய்வேன்?
Go to top

இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

6
திருப்புகலூர்ப் பெருமானே! இலவம் பூப்போன்ற வாயும் பாதங்களும் உள்ள பெண்கள் பால் இசைந்திருந்து இன்னும் அவர்களோடு பல நாள்கள் கூடி இருக்கப் போகிறோம் என்று கருதிக் கீழ்மகனாகிய அடியேன் அப்பெண்டிர் பக்கமே உலாவிக் கொண்டு உன்னை விருப்புடன் நினையாதேனாய் உன் திருவடிகளை முன்நின்று வழிபடும் சிவஞானம் என் உள்ளத்தில் பொருந்தும் நிலையினேன் அல்லேனாய் வாழும் யான் யாது செயற்பாலேன்?

காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!

7
பொய்கைகள் விளங்கும் திருப்புகலூர்ப் பெருமானே! ஐம்பொறிகளையும் அடக்கினேன் அல்லேன். ஞான தேசிகராற் பெற்ற அனுபவ ஞானம் அடியேன்பால் இல்லை. உம் தொண்டில் அடியேன் வாய்ப்புப் பெற்றேன் அல்லேன். வாய்மையோடு தூய்மை உடையேன் அல்லேன். அருச்சுனனுக்கு அருள்கள் செய்த பெருமானே! வழிபடுவோர்களுடைய தீவினைகளுக்குக் கழுவாயாகி உள்ளவரே! யான் யாது செயற்பாலேன்?

நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.

8
நீராய்த், தீயாய், நிலனாய், வானமாய், அழகிய ஒளிப்பொருள்களாய்த் தேவர்கள் வழிபட நிற்பவராய், ஆராய்ந்தறிவதற்கு அரியராய்ப் பலப்பல இடங்களில் கூத்து நிகழ்த்தும் தேவதேவர் திருப்புகலூர்ப் பெருமானாவார்.

மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

9
திருப்புகலூர்ப் பெருமானே! இவ்வுடம்பினுள்ளே சோடசகலாப் பிராசாத ஞான விளக்கை ஏற்றி, மும்மலங்களையும் கடத்தற்கு வேண்டிய அளவில் அதனைத் தூண்டிவிட்டுப் பிறவித் துன்பத்தினின்றும் தப்பிக்கொள்வதற்கு உரிய உபாயத்தை உறுதியாகப் பிடித்து மேலுயர்ந்து கொண்டிருக்கும் அடியேன் உயர முடியாதபடி ஐம்பொறிகளை அடியேன் உடலில் சால வலிமை உடையனவாக வைத்திருக்கின்றீர். ஆதலின், அடியேன் செய்வதறியேன்.

அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

10
திருப்புகலூர்ப் பெருமான் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்து உயர்த்திய திருமாலும், அரிய வேதங்களை ஓதும் பிரமனும் ஆகிய இருவரும் அறியமாட்டாத ஈசனாய் இலங்கை மன்னனான இராவணன் கயிலையைப் பெயர்த்தபோது அவன் கண்வழியே இரத்தம் பெருகுமாறு கால்விரல் ஒன்றைச் சிறிது வைத்தவராவார்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலூர்
1.002   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   குறி கலந்த இசை பாடலினான்,
Tune - நட்டபாடை   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
2.115   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வெங் கள் விம்மு குழல்
Tune - செவ்வழி   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி
Tune - இந்தளம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்குழலியம்மை)
4.054   திருநாவுக்கரசர்   தேவாரம்   பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி,
Tune - திருநேரிசை:காந்தாரம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
4.105   திருநாவுக்கரசர்   தேவாரம்   தன்னைச் சரண் என்று தாள்
Tune - திருவிருத்தம்   (திருப்புகலூர் வீரட்டானேசுவரர் திருவதிகைநாயகி)
5.046   திருநாவுக்கரசர்   தேவாரம்   துன்னக் கோவண, சுண்ணவெண் நீறு
Tune - திருக்குறுந்தொகை   (திருப்புகலூர் வர்த்தமானீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
6.099   திருநாவுக்கரசர்   தேவாரம்   எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
Tune - திருத்தாண்டகம்   (திருப்புகலூர் அக்கினீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)
7.034   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
Tune - கொல்லி   (திருப்புகலூர் அக்கினியீசுவரர் கருந்தார்க்குழலியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org