சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருவிடைமருதூர் - திருநேரிசை அருள்தரு நலமுலைநாயகியம்மை உடனுறை அருள்மிகு மருதீசர் திருவடிகள் போற்றி

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=WLhQ-ercnlA   Add audio link Add Audio

காடு உடைச் சுடலை நீற்றார்; கையில் வெண் தலையர்; தையல்
பாடு உடைப் பூதம் சூழப் பரமனார்- மருதவைப்பில்
தோடு உடைக் கைதையோடு சூழ் கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடு உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே.

1
சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து , கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி , பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான் , மருதநிலத்தில் , மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார் .

முந்தையார்; முந்தி உள்ளார்; மூவர்க்கும் முதல்வர் ஆனார்
சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார்
சிந்தையார்; சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார்
எந்தையார்; எம்பிரானார்-இடைமருது இடம் கொண்டாரே.

2
எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் , அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் , இடைமருதை இடங்கொண்டவராவர் .

கார் உடைக் கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு
நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி ஆய
போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர்-பொன்னித் தென்பால்
ஏர் உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம் கொண்டாரே.

3
காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் , அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார் .

விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் நான்கும், அங்கம்,
பண்ணினார்; பண்ணின் மிக்க பாடலார்; பாவம் தீர்க்கும்
கண்ணினார்; கண்ணின் மிக்க நுதலினார்; காமற் காய்ந்த
எண்ணினார்; எண்ணின் மிக்கார்- இடைமருது இடம்கொண்டாரே.

4
அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட , இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய் , அதனினும் மேம்பட்டவராய் , நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய் , பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய் , அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய் , மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார் .

வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த,
பூதங்கள் பாடி ஆடல் உடையவன்; புனிதன்; எந்தை;
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை-
ஏதங்கள் தீர நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.

5
நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர் , தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார் .
Go to top

பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவும், சூழ,
முறிதரு வன்னி கொன்றை, முதிர்சடை மூழ்க வைத்து,
மறிதரு கங்கை தங்க வைத்தவர்-எத்திசையும்
ஏறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம் கொண்டாரே.

6
புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி , கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார் .

படர் ஒளி சடையினுள்ளால் பாய் புனல் அரவினோடு
சுடர் ஒளி மதியம் வைத்துத் தூ ஒளி தோன்றும் எந்தை;
அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர்; அன்பர் தங்கள்
இடர் அவை கெடவும் நின்றார்-இடைமருது இடம் கொண்டாரே.

7
இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை , பாம்பு , ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய் , பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய் , அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார் .

கமழ்தரு சடையினுள்ளால் கடும் புனல் அரவினோடும்
தவழ்தரு மதியம் வைத்து, தன் அடி பலரும் ஏத்த,
மழு அது வலங்கை ஏந்தி, மாது ஒருபாகம் ஆகி,
எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம் கொண்டாரே.

8
பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார் .

பொன் திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து, மேதகத் தோன்றுகின்ற
அன்று அவர் அளக்கல் ஆகா அனல்-எரி ஆகி நீண்டார்
இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம் கொண்டாரே.

9
பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை , கங்கை , வன்னி இலை , ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி , ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார் .

மலை உடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்கத்
தலை உடன் அடர்த்து, மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலை உடை மலையை வாங்கித் திரி புரம் மூன்றும் எய்தார்-
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம் கொண்டாரே.

10
கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து , மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார் .
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவிடைமருதூர்
1.032   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஓடே கலன்; உண்பதும் ஊர்
Tune - தக்கராகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.095   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   தோடு ஓர் காதினன்; பாடு
Tune - குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.110   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.121   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நடை மரு திரிபுரம் எரியுண
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
1.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விரிதரு புலிஉரி விரவிய அரையினர், திரிதரும்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
2.056   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்!
Tune - காந்தாரம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
4.035   திருநாவுக்கரசர்   தேவாரம்   காடு உடைச் சுடலை நீற்றார்;
Tune - திருநேரிசை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
5.015   திருநாவுக்கரசர்   தேவாரம்   பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
Tune - திருக்குறுந்தொகை   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.016   திருநாவுக்கரசர்   தேவாரம்   சூலப்படை உடையார் தாமே போலும்;
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
6.017   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத்
Tune - திருத்தாண்டகம்   (திருவிடைமருதூர் மருதீசர் நலமுலைநாயகியம்மை)
7.060   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கழுதை குங்குமம் தான் சுமந்து
Tune - தக்கேசி   (திருவிடைமருதூர் மருதீசுவரர் நலமுலைநாயகியம்மை)
9.017   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா   கருவூர்த் தேவர் - திருவிடைமருதூர்
Tune -   (திருவிடைமருதூர் )
11.028   பட்டினத்துப் பிள்ளையார்   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை   திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
Tune -   (திருவிடைமருதூர் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sun, 01 Mar 2026 07:27:15 +0000