இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
கரும்பு கொப்பளித்த இன் சொல் காரிகை பாகம் ஆக,
சுரும்பு கொப்பளித்த கங்கைத் துவலை நீர் சடையில் ஏற்ற,
அரும்பு கொப்பளித்த சென்னி, அதிகை வீரட்டனாரே.
|
1
|
கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய் , வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய் , அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார் , இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார் . | |
கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி,
வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து,
செம்பு கொப்பளித்த மூன்று மதில் உடன் சுருங்க, வாங்கி
அம்பு கொப்பளிக்க எய்தார்-அதிகைவீரட்டனாரே
|
2
|
கொம்பின் கூர்மை அதிகரித்த கூரிய வளைந்த வெண் பிறையைச் சூடி , அதன்மேலும் நறுமணம் அதிகரித்த கொன்றை மலரை வளரும் சடையில் அணிந்து , செம்பு மயமான உறுதியான மும்மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்களை எய்தவர் அதிகை வீரட்டனாரே . | |
விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த,
சடையும் கொப்பளித்த திங்கள், சாந்தம் வெண் நீறு பூசி,
உடையும் கொப்பளித்த நாகம், உள்குவார் உள்ளத்து என்றும்
அடையும் கொப்பளித்த சீரார்-அதிகை வீரட்டனாரே.
|
3
|
இடபத்தில் தழும்பேற்றும் தம் திருவடிகளைத் தேவர்கள் பாடித் துதிக்க சடைக்கு ஒளித் ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி உடைமேல் பல்கித் தோன்றும் நாகங்களின கட்டியிருக்கும் திருவடிவை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது சேர்ந்திருந்திருப்பவர் அதிகை வீரட்டனாரே . | |
கறையும் கொப்பளித்த கண்டர்; காமவேள் உருவம் மங்க
இறையும் கொப்பளித்த கண்ணார்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையும் கொப்பளித்த நாவர்-வண்டு பண் பாடும் கொன்றை
அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.
|
4
|
விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய் , மன்மதன் வடிவம் அழியுமாறு தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய் , தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய் , வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய் , வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும் , எல்லோராலும் புகழப்படுவதுமான கொன்றை மலரைச் சூடிய சென்னியராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் . | |
நீறு கொப்பளித்த மார்பர்-நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி,
கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர் பாகம்,
ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த,
ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே.
|
5
|
திருநீறு பரந்து விளங்கும் மார்பினராய் , ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி , எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய் , காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் . | |
| Go to top |
வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த,
பிணங்கு கொப்பளித்த சென்னிச் சடை உடைப் பெருமை அண்ணல்-
சுணங்கு கொப்பளித்த கொங்கைச் சுரி குழல் பாகம் ஆக,
அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே.
|
6
|
வேத மந்திரங்களைச் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் தேவர்கள் முன் நின்று போற்றிப் புகழ , ஒன்றோடொன்றுணங்காதவை அதிகம் விளங்கும் சடையினை உடைய பெருமை மிக்க தலைமையாளராய் , தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவளாய்ச் சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய் , தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் . | |
சூலம் கொப்பளித்த கையர்; சுடர்விடு மழுவாள் வீசி,
நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி,
மாலும் கொப்பளித்த பாகர்-வண்டு பண் பாடும் கொன்றை,
ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே.
|
7
|
சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய் , ஒளிவீசும் மழுப்படையை சுழற்றிக் கொண்டு , முப்புரிநூல் ஒளிவீசும் மார்பில் நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்களைச் சூடித் திருமால் மகிழ்ந்திருக்கும் பாகத்தை உடையவராய் , விடத்தின் சுவட்டினை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் . | |
நாகம் கொப்பளித்த கையர்; நால்மறை ஆய பாடி
மேகம் கொப்பளித்த திங்கள் விரிசடைமேலும் வைத்து,
பாகம் கொப்பளித்த மாதர் பண் உடன் பாடி ஆட,
ஆகம் கொப்பளித்த தோளார்-அதிகைவீரட்டனாரே.
|
8
|
பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய் , நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு , மேகம் மிக்குச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிந்த சடைமேலே சூடி , ஒருபாகமாக விளங்கும் உமாதேவி பண்ணோடு பாடக் கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்முந் தோள்களை உடையவர் அதிகை வீரட்டனார் ஆவர் . | |
பரவு கொப்பளித்த பாடல் பண் உடன் பத்தர் ஏத்த,
விரவு கொப்பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து(வ்),
இரவு கொப்பளித்த கண்டர்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
அரவு கொப்பளித்த கையர்-அதிகைவீரட்டனாரே.
|
9
|
துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் . | |
தொண்டை கொப்பளித்த செவ்வாய், துடி இடை, பரவைஅல்குல்,
கொண்டை கொப்பளித்த கோதை, கோல்வளை பாகம் ஆக-
வண்டு கொப்பளித்த தீம்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டை கொப்பளித்த தெண் நீர்க் கெடில வீரட்டனாரே.
|
10
|
தொண்டைக்கனி அழகுவீசும் சிவந்தவாய் , துடி போன்ற இடை , கடல்போன்ற பரந்த அல்குல் , மயிர் முடிக்கும் விதங்களில் ஒன்றான கொண்டை பிராகாசிக்கும் கூந்தல் , திரண்ட வளையல்கள் எனும் இவற்றை உடைய பார்வதிபாகராய் , வண்டுகள் உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் கோடுகளை உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பருகுவற்குக் கெண்டை மீன்கள் தாவிவரும் தெளிந்த நீரை உடைய கெடில ஆற்றின் கரையிலுள்ள அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகிறார் . | |
| Go to top |