சிவய.திருக்கூட்டம்
sivaya.org

Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருச்சாய்க்காடு (சாயாவனம்) - சீகாமரம் தீரசங்கராபரணம் நாதநாமக்கிரியை கஜகௌரி ராகத்தில் திருமுறை அருள்தரு குயிலுநன்மொழியம்மை உடனுறை அருள்மிகு சாயாவனேசுவரர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=DO3apSOzhk0   Add audio link Add Audio

மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்; பசியாலும்
கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்
விண் புகார் என வேண்டா வெண் மாட நெடுவீதித்
தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.

1
வெண்மாடங்களைக் கொண்ட நீண்ட வீதியினை உடைய தண்மையான புகாரில் விளங்கும் சாய்க்காட்டுள் மேவிய எம் தலைவன் தாளைச்சார்ந்து அவன் புகழைக்கற்றவரும் கேட்டவரும் நில உலகில் பிறவார், பேரின்ப உலகம் பெறுவர். மனச்சோர்வாலும் பசியாலும் இடுக்கண் அடையார். நோய் உறார்.

போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச்
சாய்க்காடே பதி ஆக உடையானும், விடையானும்,
வாய்க் காடு முதுமரமே இடம் ஆக வந்து அடைந்த
பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.

2
இடுகாட்டுள் மறைந்து உறைதலை விரும்புபவனும், பூம்புகாரை அடுத்துள்ள சாய்க்காட்டைப் பதியாக உடையவனும், விடையூர்தியனும், காட்டில் உள்ள முதிய ஆலமரத்தை இடமாகக்கொண்ட பேயின் பாடலுக்கு ஏற்ப ஆடுபவனும் ஆகிய சிவபிரான் பெரியோர்களின் தலைவன் ஆவான்.

நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார்,
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப,
நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.

3
நல்லநெஞ்சமே! நீ நாள்தோறும் அவனை நினைவாயாக. சாகும் நாளையும் உயிர்வாழும் நாளையும் யார் அறிவார்கள். ஆதலின் சாய்க்காட்டை அடைந்து அங்குள்ள எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று அருச்சித்தும் செவிகளால் அவன் புகழ் மொழிகளைக்கேட்டும், நாள்தோறும் நாவினால் அவன் திருப்பெயரை நவின்றேத்தியும் செயற்படின் நல்வினைப்பயன் பெறலாம்.

கட்டு அலர்த்த மலர் தூழிக் கைதொழுமின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருத்தி கோங்கு அமரும்
தாழ்பொழில்வாய்,
மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும்
காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!

4
பொன்தட்டுப் போல மலர்ந்த செருந்தி, கோங்கு முதலிய மரங்கள் பொருந்திய தாழ்ந்த பொழிலிடத்துத் தாழைமலர்கள் மொட்டுக்களை விரித்து மணம் பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டுப் பரமேட்டியின் பாதங்களை வண்டுகளால் கட்ட விழ்க்கப்பட்ட மலர்களைத்தூவிக் கைகூப்பி வணங்குமின்.

கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள்
கொடியிடையைப்
பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல்
பால்மதியம்
தாங்கினான் பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள் நிழல் கீழ்
ஓங்கினார், ஓங்கினார் என உரைக்கும், உலகமே.

5
கோங்கரும்பு போன்ற தனங்களையும், செழுமையான மூங்கில் போன்ற தோள்களையும் கொடிபோன்ற இடையினையும் உடைய உமையம்மையைத் தன் பாகமாக வைத்து மகிழ்பவனும், தன் திருமுடிமேல் பால்போன்ற வெள்ளிய மதியைச்சூடியவனுமான பூம்புகார்ச் சாய்க்காட்டு இறைவனின் திருவடி நீழலில் ஓங்கி நின்றவரே ஓங்கினார் எனப்படுவார்.
Go to top

சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை
முன்
தீந்து ஆகம் எரி கொளுவச் செற்று உகந்தான்,
திருமுடிமேல்
ஓய்ந்து ஆர மதி சூடி, ஒளி திகழும் மலைமகள் தோள்
தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையானே.

6
சந்தனம் போலத்திருநீற்றை உடல் முழுவதும் அணிந்தவன். சாய்க்காட்டில் உறைபவன். காமனின் உடல் தீயுமாறு எரிகொளுவச் செய்தவன். திருமுடியில் நுணுகிய மதியைச் சூடியவன். ஒளிதிகழும் மலைமகள் தோளைத் தோய்ந்து அவளைப் பாகமாகக் கொண்டவன். விடையூர்தியன்.

மங்குல் தோய் மணி மாடம் மதி தவழும் நெடுவீதி,
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும்
அலர்க்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள்
அலவே.

7
மேகங்களைத் தோயுமாறு உயர்ந்து விளங்கும் அழகியமாட வீடுகளின் வெண்ணிற ஒளியை உடைய வீதிகளைக் கொண்டதும், சங்குகளைக் கரையில் கொண்டு வந்து சேர்க்கும் அலைகளின் ஆரவாரம் கேட்பதுமாய சாய்க்காட்டு இறைவன், தேன் உண்ணவந்த வரிவண்டுகள் இன்னிசைபாடும் மலர் மாலைகளை அணிந்தவன். அப்பெருமானை அடைந்த அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருள் எனத்தோன்றா.

தொடல் அரியது ஒரு கணையால் புரம் மூன்றும்
எரியுண்ண,
பட அரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு
அரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர்
இலையே.

8
தொடற்கரிய வெம்மையையுடைய ஒருகணையால் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவனும் படப்பாம்பை அணிகலனாகப் பூண்டவனும், முற்காலத்தே இராவணனைக் கயிலை மலையால் பெரிய தோள்களை ஊன்றி நெரித்தவனும் ஆகிய சிவபிரானது சாய்க்காட்டைச் சிறந்த ஒரு தலம் எனக்கருதி அடைவோர்க்கு இடர் இல்லை.

வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும்,
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பு அரிதால், அவன் பெருமை;
தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவு உடைமை தேறோமே.

9
இவ்வுலகை நீர்வார்த்துத்தர ஏற்ற திருமாலும், தாமரைமலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருதலைமைத் தேவர்க்கும் அவன் பெருமை அளந்து காணுதற்கு அரியதாகும். மகளிர்பாடும் இசைப்பாடல் ஓவாதே கேட்கும் சாய்க்காட்டு எம்பெருமானைத் தெய்வமாக விரும்பாதார் ஞானம்பெறார்.

குறங்கு ஆட்டும் நால்விரல் கோவணத்துக்கு உலோவிப்
போய்
அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும்
திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று
அடைமின்,
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!

10
தொடைகளில் அடையும் நால்விரல் கோவண ஆடையோடு உலாவித்திரிந்து அறம் போலக்கூறும் சமண் சாக்கியர்கள் பழித்துரை கூறும் திறங்களைக் கேளாது, சுடுகாட்டில் நடனம் ஆடும் பூம்புகார்ச்சாய்க்காட்டு இறைவன் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.
Go to top

நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல் அடியார்
அம் பந்தும் வரிக் கழலும் அரவம் செய் பூங் காழிச்
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.
11
பந்து நோகுமாறு அதனைப் புடைத்துக்கொண்டு பாதங்களில் அணிந்த நூபுரம் ஒலிக்க அழகிய பந்துகளும் கழற்சிக்காய்களும் கொண்டு விளையாடி மகளிர் ஆரவாரிக்கும் அழகிய காழிப்பதியுள்தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்ப்பாடல்கள் பத்தையும் எமக்குப் பற்றுக்கோடு எனக்கருதிச் சாய்க்காட்டு இறைவனை ஏத்துவார்க்கு இடர்கள் கெடும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருச்சாய்க்காடு (சாயாவனம்)
2.038   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நித்தலும் நியமம் செய்து, நீர்மலர்
Tune - இந்தளம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
2.041   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மண் புகார், வான்புகுவர்; மனம்
Tune - சீகாமரம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயாவனேசுவரர் குயிலுநன்மொழியம்மை)
4.065   திருநாவுக்கரசர்   தேவாரம்   தோடு உலாம் மலர்கள் தூவித்
Tune - திருநேரிசை   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
6.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   வானத்து இளமதியும் பாம்பும் தன்னில்
Tune - திருத்தாண்டகம்   (திருச்சாய்க்காடு (சாயாவனம்) சாயவனேசுவரர் குயிலின்நன்மொழியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Sat, 04 Apr 2026 04:53:34 +0000