சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்புகலி -(சீர்காழி ) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=k7fxm4B3rIM   Add audio link Add Audio

முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்,
பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன் வணங்கும்
சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.

1
பொருந்திய கலைகளின் பொருளையும் மூவுலக வாழ்வையும் உயிர்கட்கு ஆராய்ந்து அளித்துக் காக்கும் ஒருவராக விளங்கும் சிவபிரானின் பழமையான ஊர்யாதென வினவின், தேவர்கள் மண்ணுலகை அடைந்து துதி செய்து வணங்கும் சென்னியில் உள்ளவராகும் இறைவர் எழுந்தருளிய திருப்புகலி என்னும் தலமாகும்.

வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

2
வளமையான அலைகளோடு கூடிய கங்கையை மதி சூடிய சடையின்மேல் தாங்கிப் பழமையான தீயைக் கையின்கண் ஏந்தி ஆடும் பரமனது பதி தாமரை மலரின் மணம் வீசப் பெறுவதும் சோலைகள் சூழ்ந்ததும் , தெளிந்த அலைகளை உடைய கடலில் தோணியாக மிதந்து பொலிந்ததும் ஆகிய திருப்புகலியாகும் .

பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
நா அணவும் அந்தணன் விருப்புஇடம் அது என்பர்
பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,
தே வண விழா வளர் திருப் புகலிஆமே.

3
இறைவன் புகழான பாடல்கள் பாடும் சிந்தையை உடையவர்கள், பத்தர்களோடு கூடிப்பரவ, அவர்தம் நாவில் உறையும் அந்தணனாக விளங்கும் பெருமானுக்கு விருப்பமான இடம், பூக்கள் நிறைந்த சோலையில் இருளைத்தரும் மாலைப்போதுவர தெய்வத் தொடர்பான விழாக்கள் நிகழும் திருப்புகலி எனக்கூறுவர்.

மை தவழும் மா மிடறன், மாநடம் அது ஆடி,
கை வளையினாளொடு கலந்த பதி என்பர்
செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,
தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.

4
கருமை நிறம் பொருந்தியமிடற்றினை உடைய சிவபிரான் மகிழ்ச்சியால் சிறந்த நடனங்கள் ஆடி, கைகளில் வளையல் அணிந்த உமையம்மையோடு கலந்துறையும் பதி, உருத்திரர்கள் பெரிதான இறைத்தொண்டுகளைப்புரிந்து பெருமானோடு இணங்கி நிற்கும் திருப்புகலியாகும்.

முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
பின்னை அருள்செய்த பிறையாளன் உறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,
செந்நெல் வயல் ஆர்தரு திருப் புகலிஆமே.

5
முன்னமே அறுவகைச் சமயங்களாய் விளங்கி அவரவரும் மேற்கொண்ட கொள்கைகளுக்கு ஏற்ப அருள் செய்த பிறையாளன் உறையும் கோயில், சங்குகள் ஒளிவிடும் புன்னைமலர்ச் சோலைகளை உடையதும் செந்நெல்விளையும் வயல்கள் பொருந்தியதுமான திருப்புகலியாகும்.
Go to top

வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர்
கொங்கு அண வியன் பொழிலின் மாசு பனி மூச,
தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.

6
மரக்கலங்கள் நிறைந்து தோன்றும் திருப்பாற் கடலில் தோன்றிய விடத்தினை உண்ட அழகிய கருணையாளன் ஆகிய சிவபிரான் மிகவிரும்பி இருக்கும் இடம், மணம் நிறையுமாறு பனிபடர்ந்த மாசுடன் விளங்கும் பொழில்களை உடையதும் இனிய தென்னைமரங்கள் சூழ்ந்ததுமான திருப்புகலியாகும்.

நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
வல்வினைகள் தீர்த்துஅருளும் மைந்தன் இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,
செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.

7
வறுமை இன்பவாழ்வு நலங்கள் ஆகியனவற்றைத் தருபவராய்த் தம்மை வழிபடுவாரின் வலிய வினைகளைத் தீர்த்தருளும் பெருவீரராய் விளங்கும் பெருமானாருடைய இடம், பெருகிய அடியார்கள் நிலமிசை இசைபாடி வாழ்த்துவதும், செல்வம் நிரம்பிய மறையவர்கள் நிறைந்துள்ளதுமான திருப்புகலியாகும்.

பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால்
அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர்
நெருக்குஉறு கடல் திரைகள் முத்தம்மணி சிந்த,
செருக்குஉறு பொழில் பொலி திருப் புகலிஆமே.

8
பரவியபுகழாளரும், கயிலைமலையால் இராவணனை அடர்த்தருளிய தலைவருமான சிவபெருமானது இடம், நெருங்கிவரும் கடல் அலைகள் முத்துக்களையும் மணிகளையும் சிந்துதலால் பெருமை பெற்ற பொழில்கள் பொலியும் திருப்புகலிப் பதியாகும்.

கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்
ஆடுஅரவம் வைத்துஅருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்
தேட, உறையும் நகர் திருப் புகலி ஆமே.

9
காந்தள் மலர்களோடு வளைந்த பிறைமதி குலாவும் சடையின்மேல் ஆடும் பாம்பினையும் வைத்தருளிய தலைவரும், திருமால், பிரமர் தேட எரியுருவமாய்த் தோன்றி அவர்கள் கீழும், மேலும் அடி முடிகளைத் தேட நின்ற வருமான சிவபிரான் உறையும் நகர் திருப்புகலியாகும்.

கற்ற மணர், உற்று உலவு தேரர், உரைசெய்த
குற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர்
பொன் தொடி மடந்தையரும், மைந்தர், புலன் ஐந்தும்,
செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.

10
கல்வி கற்ற அமணர்களும், நூலறிவில் தேர்ந்துலவும் புத்தர்களும் மெய்ப்பொருள் அறியாது கூறும் குற்றம் பொருந்திய கொள்கைகளை ஏலாதவனது ஊர், பொன்னால் இயன்ற வளையல்களை அணிந்த மகளிரும் மைந்தர்களும், ஐம்புலன்களையும் வென்றஞானியரும் விரும்பும் திருப்புகலியாகும்.
Go to top

செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல்,
அந்தம் முதல் ஆகி நடுவுஆய பெருமானைப்
பந்தன் உரை செந்தமிழ்கள்பத்தும் இசை கூர
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.

11
செந்தமிழ் மொழிபரவி வளரும் திருப்புகலியில் எழுந்தருளிய ஆதி, அந்தம், நடு எனப்படும் மூவகையாகவும் விளங்கும் பெருமான்மீது, ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு இசையோடு இயலும் வகையில் பாடிப்பரவுவார், வீடுபேற்றுக்கு உரியவர் ஆவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்புகலி -(சீர்காழி )
1.030   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விதி ஆய், விளைவு ஆய்,
Tune - தக்கராகம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.104   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான்
Tune - வியாழக்குறிஞ்சி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.025   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உகலி ஆழ்கடல் ஓங்கு பார்
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.029   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
Tune - இந்தளம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.054   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம்
Tune - சீகாமரம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.122   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விடை அது ஏறி, வெறி
Tune - செவ்வழி   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.003   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி   (திருப்புகலி -(சீர்காழி ) மந்திரபுரீசுவரர் பெரியநாயகியம்மை)
3.007   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம்   (திருப்புகலி -(சீர்காழி ) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000