குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
இலகு மான் மழு ஏந்தும் அம் கையன்,
நிலவும் இந்திரநீலப்பர்ப்பதத்து
உலவினான், அடி உள்க, நல்குமே.
|
1
|
விளங்கும் மான் மழுஏந்திய அகங்கையாளனாய்த் தன்னிடம் அன்பு செய்யும் பூதகணங்கள் போற்ற, விளங்கித் தோன்றும் இந்திர நீலப்பர்வதத்து வீற்றிருந்து உலாவுகின்ற சிவபிரான் தன் திருவடிகளை நினைவார்க்கு அருள் புரிவான். | |
குறைவு இல் ஆர் மதி சூடி, ஆடல் வண்டு
அறையும் மா மலர்க்கொன்றை சென்னி சேர்
இறைவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
உறைவினான்தனை ஓதி உய்ம்மினே!
|
2
|
மேலும் குறைதல் இன்றி என்றும் ஒரு கலையாய் நிறைவுபெறும் பிறையை, வண்டுகள் இசைக்கும் சிறந்த கொன்றை மலர் சூடிய சென்னியில் சேர்த்துள்ள இறைவனும், இந்திரநீலப் பருவதத்து உறைபவனுமாகிய சிவபிரானைப் போற்றி உய்யுங்கள். | |
என் பொன்! என் மணி! என்ன ஏத்துவார்
நம்பன், நால்மறை பாடு நாவினான்,
இன்பன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அன்பன், பாதமே அடைந்து வாழ்மினே!
|
3
|
என் பொன்னே என்மணியே என்று புகழ்ந்து போற்றுவாரை விரும்புபவன், நான்கு மறைகளையும் பாடும் நாவினை உடையவன், இன்பவடிவினன், இந்திரநீலப் பர்வதத்து அன்பு உடையவன் ஆகிய சிவபிரான் திருவடிகளையே சரணாக அடைந்து வாழுங்கள். | |
நாசம் ஆம், வினை; நன்மைதான் வரும்;
தேசம் ஆர் புகழ் ஆய செம்மை எம்
ஈசன், இந்திரநீலப்பர்ப்பதம்
கூசி வாழ்த்துதும், குணம் அது ஆகவே.
|
4
|
நம் வினைகள் நாசமாகவும், நன்மைகளே வந்தெய்தவும், உலகளாவிய புகழுடைய செம்மையாளனாகிய எம் ஈசனும் இந்திரநீலப் பருவதத்து உறைவோனுமாகிய சிவபிரானை, நும் சிறுமையையும் அவன் பெருமையையும் எண்ணி நற்குணங்கள் பலவும் அமைய வாழ்த்துங்கள். | |
மருவு மான்மடமாது ஒர்பாகம் ஆய்ப்
பரவுவார் வினை தீர்த்த பண்பினான்,
இரவன், இந்திரநீலப்பர்ப்பதத்து
அருவி சூடிடும் அடிகள் வண்ணமே!
|
5
|
இந்திர நீலப்பருவதத்து இறைவனது இயல்பு அருவிகளை மாலையாகச் சூடி மகிழ்வதோடு தன்னைமருவிய மான் போன்ற கண்ணளாகிய உமையம்மை ஒருபாகமாக விளங்க, தன்னைப் பரவுவார் வினைகளைப் போக்குவதாகும். | |
| Go to top |
வெண்நிலாமதி சூடும் வேணியன்,
எண்ணிலார் மதில் எய்த வில்லினன்,
அண்ணல், இந்திரநீலப்பர்ப்பதத்து
உள் நிலாவுறும் ஒருவன் நல்லனே.
|
6
|
வெண்மையான நிலவைத் தரும் மதியைச் சூடும் சடையினனும் பகைவரின் திரிபுரங்களை அழித்த வில்லினனும், தலைமையாளனும் ஆகிய இறைவன், இந்திரநீலப்பருவதத்துள் விளங்கும் ஒருவன் அல்லனோ?. | |
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே!
|
7
|
கொடியில் கொண்ட விடையை உடையவர். எமனை உதைத்தவர். பொடியணிந்த மேனியில் பாம்பினை அணிந்தவர், தலைவர். இந்திரநீலப் பருவதத்துள் வாழும் இறைவனின் இயல்புகள் இவையாகும். | |
எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே!
|
8
|
கயிலை மலையை எடுத்த இராவணனின் கைகள் தோள்கள் ஆகியவற்றை அடர்த்த விரலால் அவ்விராவணனை ஆட்படுத்தியவன் உறையும் இந்திர நீலப்பருவதத்தை முடிகளால் வணங்க இன்பம் எளிதின் வாய்க்கும். | |
பூவினானொடு மாலும் போற்றுஉறும்
தேவன் இந்திர நீலப்பர்ப்பதம்
பாவியாது எழுவாரைத் தம் வினை
கோவியா வரும்; கொல்லும், கூற்றமே.
|
9
|
தாமரை மலரில் எழுந்தருளிய பிரமனோடு திருமால் போற்றி வணங்கும் தேவனாகிய இந்திரநீலப் பருவதத்துள் உறையும் இறைவனை நினையாதவரை வினைகள் சினக்கும். கூற்றம் கொல்லும். | |
கட்டர்குண்டு அமண், தேரர், சீர் இலர்,
விட்டர் இந்திரநீலப்பர்ப்பதம்,
எள் தனை நினையாதது என்கொலோ,
சிட்டுஅதுஆய் உறை ஆதி சீர்களே?
|
10
|
கட்டானவும் பருமையானவுமான உடலினராகிய சமணபுத்தர்கள் சிறப்பற்றவர். நம்மால் விட்டொழியத் தக்கவர். அவர்களை விடுத்து இந்திரநீலப் பருவதத்து உறையும் மேலான ஆதியின் சீர்களை எள்ளளவும் நினையாதிருப்பது ஏனோ?. | |
| Go to top |
கந்தம் ஆர் பொழில் சூழ்ந்த காழியான்,
இந்திரன் தொழும் நீலப்பர்ப்பதத்து
அந்தம் இலியை ஏத்து ஞானசம்
பந்தன் பாடல் கொண்டு ஓதி வாழ்மினே!
|
11
|
மணம் கமழும் பொழில் சூழ்ந்த காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் இந்திரனால் வழிபடப் பெற்ற நீலமலையில் விளங்கும் அந்தம் இல்லாத பெருமானை ஏத்திய பாடல்களை ஓதி வழிபட்டு வாழுங்கள். | |