சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு யாழ்மொழியம்மை உடனுறை அருள்மிகு மணவாளநாயகர் திருவடிகள் போற்றி

திருமணம்‌ கைகூட ஓத வேண்டிய பதிகம்‌
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=3iP3choR434   Add audio link Add Audio

அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று எய்து
குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,
மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.

1
கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.

விதியானை, விண்ணவர்தாம் தொழுது ஏத்திய
நெதியானை, நீள்சடைமேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.

2
நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.

எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறிய
இப்பால் ஆய் எனையும் ஆள உரியானை,
வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.

3
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.

விடையானை, மேல் உலகுஏழும் இப் பார் எலாம்
உடையானை, ஊழிதோறுஊழி உளதுஆய
படையானை, பண் இசை பாடு மணஞ்சேரி
அடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை, அல்லலே.

4
விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.

எறி ஆர் பூங்கொன்றையினோடும் இள மத்தம்
வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானை,
மறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்
செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.

5
ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான்கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.
Go to top

மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண் இசைஆன பகர்வானை;
வழியானை; வானவர் ஏத்தும் மணஞ்சேரி
இழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.

6
முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.

எண்ணானை, எண் அமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானை, கண் ஒருமூன்றும் உடையானை,
மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
7
யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.

எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே

8
கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகியபத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.

சொல்லானை; தோற்றம் கண்டானும், நெடுமாலும்,
கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்க
வல்லார், நல் மா தவர், ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!

9
வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப்படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.

சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாஆக வாழ்பவர்மேல் வினை பற்றாவே.

10
சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.
Go to top

கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.

11
கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
2.016   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் ஆரும் அம்புஅதனால் புரம்மூன்று
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
5.087   திருநாவுக்கரசர்   தேவாரம்   பட்டம் நெற்றியர்; பாய் புலித்தோலினர்;
Tune - திருக்குறுந்தொகை   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) மணவாளநாயகர் யாழ்மொழியம்மை)
7.007   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   மத்தயானை ஏறி, மன்னர் சூழ
Tune - இந்தளம்   (எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) அயிராவதேசுவரர் வாசமலர்க்குழன்மாதம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000