சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருப்பராய்துறை - மேகராகக்குறிஞ்சி கவாம்போதி நீலாம்பரி காஞ்சனபௌலி ராகத்தில் திருமுறை அருள்தரு பசும்பொன்மயிலம்மை உடனுறை அருள்மிகு திருப்பராய்த்துறைநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=nkTMgUi7HWk   Add audio link Add Audio

நீறு சேர்வது ஒர் மேனியர், நேரிழை
கூறு சேர்வது ஒர் கோலம் ஆய்,
பாறு சேர் தலைக் கையர் பராய்த்துறை
ஆறு சேர் சடை அண்ணலே.

1
திருப்பராய்த்துறையில் கங்கையை அணிந்த சடையினராய் விளங்கும் இறைவர் திருநீறு அணிந்த திருமேனியை உடையவர். அணிகலன்கள் பல புனைந்த உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட கோலத்தினர். பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கூடிய பிரமனது தலையோட்டைக் கையில் கொண்டவர்.

கந்தம் ஆம் மலர்க்கொன்றை, கமழ் சடை,
வந்த பூம்புனல், வைத்தவர்
பைந்தண் மாதவி சூழ்ந்த பராய்த்துறை
அந்தம் இல்ல அடிகளே.

2
பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்த திருப்பராய்த்துறையில் விளங்கும் அழிவற்றவராகிய இறைவர் மணங்கமழும் சிறந்த மலர்களும் கொன்றையும் மணக்கும் சடைமுடியின்மேல் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியை வைத்துள்ளவர்.

வேதர் வேதம் எல்லாம் முறையால் விரித்து
ஓத நின்ற ஒருவனார்;
பாதி பெண் உரு ஆவர் பராய்த்துறை
ஆதி ஆய அடிகளே.

3
திருப்பராய்த்துறையில் எல்லா உலகங்களுக்கும் ஆதியாக விளங்குபவராய் எழுந்தருளியுள்ள இறைவர் வேதங்களை அருளிச்செய்தவர். எல்லா வேதங்களையும் முறையாக விரித்துப் பொருள் விளக்கம் அருளிய ஒப்பற்றவர். தம் திருமேனியில் பாதிப்பெண்ணுருவாக விளங்குபவர்.

தோலும் தம் அரை ஆடை, சுடர்விடு
நூலும் தாம் அணி மார்பினர்
பாலும் நெய் பயின்று ஆடு, பராய்த்துறை,
ஆல நீழல் அடிகளே.

4
திருப்பராய்த்துறையில் ஆலநீழலில் எழுந்தருளிப் பால் நெய் முதலியவற்றை விரும்பி ஆடும் இறைவர் புலித்தோலைத் தம் இடையிலே ஆடையாக உடுத்தவர். ஒளி பொருந்திய பூணூல் அணிந்த மார்பினை உடையவர்.

விரவி நீறு மெய் பூசுவர், மேனிமேல்;
இரவில் நின்று எரி ஆடுவர்;
பரவினார் அவர் வேதம் பராய்த்துறை
அரவம் ஆர்த்த அடிகளே.

5
திருப்பராய்த்துறையில் பாம்பை இடையில் கட்டியவராய் விளங்கும் பரமர் திருநீற்றைத் தம் மேனிமேல் விரவப் பூசியவர். நள்ளிரவில் சுடுகாட்டுள் நின்று எரி ஆடுபவர். வேதங்களால் பரவப் பெற்றவர்.
Go to top

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடையவர்
பறையும் சங்கும் ஒலிசெய் பராய்த்துறை
அறைய நின்ற அடிகளே.

6
பறை சங்கு முதலியன முழங்கும் திருவிழாக்கள் நிகழும் திருப்பராய்த்துறையில் எல்லோரும் புகழ்ந்து போற்ற எழுந்தருளிய இறைவர் வேதங்களை ஓதுபவர். மான்கன்றைக் கையின்கண் உடையவர் விடக்கறை கொண்ட கண்டத்தையுடையவர்.

விடையும் ஏறுவர்; வெண்பொடிப் பூசுவர்;
சடையில் கங்கை தரித்தவர்;
படை கொள் வெண்மழுவாளர் பராய்த்துறை
அடைய நின்ற அடிகளே.

7
திருப்பராய்த்துறையிற் பொருந்தி விளங்கும் இறைவர் விடையேற்றினை ஊர்ந்து வருபவர். வெண்மையான திருநீற்றைப் பூசுபவர். சடையின்மேல் கங்கையைத் தரித்தவர். வெண்மையான மழுவைப் படைக்கருவியாகக் கொண்டவர்.

தருக்கின் மிக்க தசக்கிரிவன் தனை
நெருக்கினார், விரல் ஒன்றினால்;
பருக்கினார் அவர் போலும் பராய்த்துறை
அருக்கன் தன்னை, அடிகளே.

8
திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய இறைவர் வலிமைமிக்க பத்துத் தலைகளை உடைய இராவணனைத் தம் கால் விரல் ஒன்றினால் நெரித்தவர். தக்கன் வேள்வியில் கதிரவனின் பற்களைத் தகர்த்தவர்.

நாற்ற மாமலரானொடு மாலும் ஆய்த்
தோற்றமும் அறியாதவர்;
பாற்றினார், வினை ஆன; பராய்த்துறை
ஆற்றல் மிக்க அடிகளே.

9
திருப்பராய்த்துறையில் ஆற்றல் மிக்கவராய் விளங்கும் அடிகள் மணம் பொருந்திய தாமரை மலரில் விளங்கும் பிரமன் திருமால் ஆகியோரால் அடிமுடி அறியப்பெறாத தோற்றத்தினை உடையவர். தம்மை வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவர்.

திரு இலிச் சிலதேர், அமண் ஆதர்கள்,
உரு இலா உரை கொள்ளேலும்!
பரு விலால் எயில் எய்து, பராய்த்துறை
மருவினான் தனை வாழ்த்துமே!

10
புண்ணியமில்லாத சிலராகிய புத்தர்களும் சமணர்களாகிய கீழ்மக்களும் கூறும் பொருளற்ற அறவுரைகளைக் கேளாதீர். பெரிய மேருமலையாகிய வில்லால் முப்புரங்களை எய்தழித்து உலகைக் காத்துத் திருப்பராய்த்துறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வாழ்த்துவீர்களாக.
Go to top

செல்வம் மல்கிய செல்வர் பராய்த்துறைச்
செல்வர்மேல், சிதையாதன
செல்வன் ஞானசம்பந்தன செந்தமிழ்,
செல்வம் ஆம், இவை செப்பவே.

11
பொருட் செல்வங்களால் நிறைந்து விளங்கும் சிவஞானச் செல்வர்கள் வாழும் திருப்பராய்த்துறையில் எழுந்தருளிய வீடுபேறாகிய செல்வத்தையுடைய இறைவன்மீது அருட்செல்வனாக விளங்கும் ஞானசம்பந்தன் அருளிய அழிவற்ற இச்செந்தமிழ்ப் பாடல்களை ஓதினால் ஓதின அவர்கட்கு எல்லாச் செல்வங்களும் உண்டாகும்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பராய்துறை
1.135   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீறு சேர்வது ஒர் மேனியர்,
Tune - மேகராகக்குறிஞ்சி   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)
5.030   திருநாவுக்கரசர்   தேவாரம்   கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
Tune - திருக்குறுந்தொகை   (திருப்பராய்துறை திருப்பராய்த்துறைநாதர் பசும்பொன்மயிலம்மை)

This page was last modified on Fri, 10 Jul 2026 00:17:47 +0000      
send corrections and suggestions to admin-at-sivaya.org