குருந்து அவன், குருகு அவன், கூர்மை அவன், பெருந்தகை, பெண் அவன், ஆணும் அவன், கருந்தட மலர்க்கண்ணி காதல் செய்யும் மருந்து அவன், வள நகர் மாற்பேறே.
|
1
|
குருத்தாக தளிராக மொட்டு காய் ஆதியனவாக விளங்குபவனும் பெருந்தகையாய்ப் பெண் ஆண் வடிவோடு விளங்குபவனும் தடாகத்தில் பூக்கும் கருநீல மலர் போன்ற கண்களை உடைய உமையம்மையால் விரும்பப்படுபவனும் அரிய மருந்தாய் விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் மாற்பேறு. | |
பாறு அணி வெண்தலை கையில் ஏந்தி, வேறு அணி பலி கொளும் வேட்கையனாய், நீறு அணிந்து, உமை ஒருபாகம் வைத்த மாறு இலி வள நகர் மாற்பேறே.
|
2
|
பருந்தால் நெருங்கப்பட்ட புலால் நீங்கிய அழகிய வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்தி உலகியலில் வேறுபட்ட அழகுடன் சென்று பலியேற்கும் வேட்கையனாய் மேனி முழுதும் நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக வைத்துள்ளவனும் தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய சிவபிரானது வளநகர் மாற்பேறு. | |
கரு உடையார் உலகங்கள் வேவ, செரு விடை ஏறி முன் சென்று நின்று, உரு உடையாள் உமையாளும் தானும் மருவிய வள நகர் மாற்பேறே.
|
3
|
பிறப்புடைய ஆன்மாக்களுக்குப் படைக்கப்பட்ட உலகங்களை ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும் போரில் வல்ல விடை மீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான் மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும் தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும் வளநகர் மாற்பேறாகும். | |
தலையவன், தலை அணிமாலை பூண்டு கொலை நவில் கூற்றினைக் கொன்று உகந்தான், கலை நவின்றான், கயிலாயம் என்னும் மலையவன், வள நகர் மாற்பேறே.
|
4
|
எல்லோரினும் மேம்பட்டவனும் அழகிய தலைமாலையைப் பூண்டு உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக் கொன்று மகிழ்ந்தவனும் பல கலைகளையும் உலகிற்கு அருளியவனும் கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும். | |
துறை அவன், தொழிலவன், தொல் உயிர்க்கும் பிறை அணி சடை முடிப் பெண் ஓர்பாகன், கறை அணி மிடற்று அண்ணல், காலன் செற்ற மறையவன், வள நகர் மாற்பேறே.
|
5
|
பல்வேறு நெறிகளாய் விளங்குபவனும் பழமையாக வரும் உயிர்களின் பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும் பிறையணிந்த சடைமுடியனும் உமை நங்கையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடக்கறை பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும் காலனைச் செற்றுகந்த மறையவனுமான சிவபிரானது வளநகர் மாற்பேறாகும். | |
| Go to top |
பெண்ணின் நல்லாளை ஓர்பாகம் வைத்துக் கண்ணினால் காமனைக் காய்ந்தவன்தன், விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்கும், நல் மாற்பேறே.
|
6
|
பெண்களிற் பேரழகினளாகிய உமையம்மையை ஒரு பாகமாக வைத்திருந்தும் தனது நெற்றிக் கண்ணால் காமனை நீறாக்கி அழித்தவனும் தேவர்கள் அசுரர்கள் முனிவர்கள் மண்ணுலக மக்கள் ஆகியோரால் வணங்கப் பெறுபவனுமாய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும். | |
தீது இலா மலை எடுத்த அரக்கன் நீதியால் வேத கீதங்கள் பாட, ஆதியான் ஆகிய அண்ணல், எங்கள் மாதி தன் வள நகர் மாற்பேறே.
|
7
|
குற்றமற்ற கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனை முதலில் கால்விரலால் அடர்த்துப் பின் அவன் பிழை உணர்ந்து முறையோடு வேத கீதங்களைப் பாட அருள்புரிந்த ஆதியானாகிய அண்ணலும் மாதினை இடப்பாகமாக உடைய எங்கள் தலைவனுமாய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும். | |
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும் கொய் அணி நறுமலர் மேல் அயனும் ஐயன் நன் சேவடி அதனை உள்க, மையல் செய் வள நகர் மாற்பேறே.
|
8
|
சிவந்த தண்தாமரை மலர்போன்ற கண்களை உடைய திருமாலும் கொய்து அணியத்தக்க தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனும் தலைவனாகிய சிவபிரானின் சேவடிகளை விருப்போடு நினைந்து வழிபட அருள்புரியும் சிவபிரான் எழுந்தருளிய வளநகர் மாற்பேறாகும். | |
குளித்து உணா அமணர், குண்டு ஆக்கர், என்றும் களித்து நன் கழல் அடி காணல் உறார்; முளைத்த வெண்மதியினொடு அரவம் சென்னி வளைத்தவன் வள நகர் மாற்பேறே.
|
9
|
குளித்துப்பின் உண்ணாத இயல்பினராகிய அமணர்களும் பருத்த உடலினராகிய புத்தர்களும் களிப்போடு சிவபிரான் திருவடிகளைக் காணப்பெறார். ஒரு கலைப் பிறையாக முளைத்த வெள்ளிய பிறை மதியையும் பாம்பையும் முடிமீது சூடியவனாகிய சிவபிரானது வளநகர் மாற்பேறாகும். | |
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச் சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார் எந்தை தன் கழல் அடி எய்துவரே.
|
10
|
ஞானசம்பந்தன் செவ்விய இசையால் பாடிப் போற்றிய மாற்பேற்றைத் தரிசித்துச் சந்த இசையோடு கூடிய அழிவற்ற இனிய இத்திருப்பதிகப் பாடல்களைக் கொண்டு ஏத்தி வழிபட வல்லவர் எந்தையாகிய சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை எய்துவர். | |
| Go to top |