சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவல்லம் - வியாழக்குறிஞ்சி தீரசங்கராபரணம் செளராஷ்டிரம் கவுடாமல்ஹார் ராகத்தில் திருமுறை அருள்தரு வல்லாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வல்லநாதர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=sZs5as1K7o4   Add audio link Add Audio

எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
தரித்தவன், கங்கையைத் தாழ்சடைமேல்;
விரித்தவன் வேதங்கள்; வேறுவேறு
தெரித்தவன், உறைவு இடம் திரு வல்லமே.

1
அவுணர்களின் முப்புரங்களையும் எரியில் மூழ்குமாறு செய்து அழித்தவனும் தாழ்ந்து தொங்கும் சடைமுடிமீது கங்கையைத் தரித்தவனும் வேதங்களை அருளிச் செய்தவனும் அவற்றின் பொருள்களை ஆறு அங்கங்களுடன் தெளியச் செய்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திருவல்லமாகும்.

தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்
தூயவன், தூ மதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.

2
உலக உயிர்கட்குத் தாய் போன்றவனும் தனக்கு யாரையும் உவமை சொல்ல முடியாத தூயவனும் தூய மதியை முடியில் சூடியவனும் எல்லாப் பொருள்களுமாக ஆனவனும் போகிகள் ஆன அமரர் மானசீலரான முனிவர் முதலானோர்க்குச் சேயவனும் ஆன சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

பார்த்தவன், காமனைப் பண்பு அழிய;
போர்த்தவன், போதகத்தின் உரிவை;
ஆர்த்தவன் நான்முகன் தலையை, அன்று
சேர்த்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

3
மன்மதனின் அழகு கெடுமாறு நெற்றி விழியால் பார்த்து அவனை எரித்தவனும் யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் தன்முனைப்போடு ஆரவாரித்த பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையினது ஓட்டைக் கையில் உண் கலன் ஆகச் சேர்த்துள்ளவனும் ஆகிய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

கொய்த அம் மலர் அடி கூடுவார் தம்-
மை, தவழ் திருமகள் வணங்க வைத்து,
பெய்தவன், பெரு மழை; உலகம் உய்யச்
செய்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

4
அன்பர்களால் கொய்து அணியப்பெற்ற அழகிய மலர் பொருந்திய திருவடிகளைச் சேர்பவர்களைப் பலரிடத்தும் மாறிமாறிச் செல்லும் இயல்பினளாகிய திருமகளை வணங்குமாறு செய்விப்பவனும் பெருமழை பெய்வித்து உலகை உய்யுமாறு செய்பவனுமாய சிவபிரானது உறைவிடம் திருவல்லமாகும்.

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம்
நேர்ந்தவன்; நேரிழையோடும் கூடி,
தேர்ந்தவர் தேடுவார் தேடச் செய்தே
சேர்ந்தவன்; உறைவு இடம் திரு வல்லமே.

5
தன்னைச் சார்ந்தவர்கட்கு இன்பங்கள் தழைக்குமாறு நேரிய அணிகலன்களைப் பூண்டுள்ள உமையம்மையாரோடு அருள் வழங்க இசைந்துள்ளவனும் தன்னைச் சேர்ந்த சிவஞானியர்க்கும் பிறவாறு தேடுபவர்க்கும் அவர்களைத் தேடுமாறு செய்து அவர்கட்கு உள்ளிருந்து அருள் செய்பவனுமாகிய சிவபெருமானது உறைவிடம் திருவல்லமாகும்.
Go to top

பதைத்து எழு காலனைப் பாதம் ஒன்றால்
உதைத்து, எழு மா முனிக்கு உண்மை நின்று,
விதிர்த்து எழு தக்கன் தன் வேள்வி அன்று
சிதைத்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

6
சினந்து வந்த எமனை இடக்காலால் உதைத்துத் தன்னை வணங்கி எழுந்த மார்க்கண்டேயனுக்கு உண்மைப் பொருளாய் எதிர்நின்று அருள் செய்தவனும் விதிர்த்தெழு கோபத்தால் படபடத்துத் திட்டமிட்டுச் செயற்பட்ட தக்கனது வேள்வியை முற்காலத்தில் சிதைத்தவனும் ஆகிய சிவபிரானது இடம் திருவல்லமாகும்.

இகழ்ந்து அரு வரையினை எடுக்கல் உற்று, ஆங்கு
அகழ்ந்த வல் அரக்கனை அடர்த்த பாதம்
நிகழ்ந்தவர், நேடுவார், நேடச் செய்தே
திகழ்ந்தவன் உறைவு இடம் திரு வல்லமே.

7
இகழ்ந்து அரிய கயிலை மலையை எடுத்து அப்புறப்படுத்தற் பொருட்டு அகழ்ந்த வலிய இராவணனை அடர்த்த திருவடியை உடையவனும் அத்திருவடியையே நிகழ் பொருளாகக் கொண்ட அன்பர்கள் தேடி வருந்திய அளவில் அவர்கள் உள்ளத்திலேயே திகழ்ந்து விளங்குபவனும் ஆகிய சிவபிரான் உறையுமிடம் திருவல்லமாகும்.

பெரியவன்; சிறியவர் சிந்தைசெய்ய
அரியவன்; அருமறை அங்கம் ஆனான்;
கரியவன், நான்முகன், காண ஒண்ணாத்
தெரியவன்; உறைவு இடம் திரு வல்லமே.

8
எல்லோரினும் பெரியவனும் அறிவிற் சிறியவர்கள் சிந்தித்து உணர்தற்கு அரியவனும் அரிய வேதங்களும் அவற்றின் அங்கங்களும் ஆனவனும் திருமால் பிரமர்கள் காண ஒண்ணாதவனாய் அன்பிற் சிறந்தார்க்குத் தெரிய நிற்பவனும் ஆன சிவபிரானது வளநகர் திருவல்லமாகும்.

அன்றிய அமணர்கள், சாக்கியர்கள்,
குன்றிய அற உரை கூறா வண்ணம்
வென்றவன், புலன் ஐந்தும்; விளங்க எங்கும்
சென்றவன்; உறைவு இடம் திரு வல்லமே.

9
கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறாவாறு ஐம்புலன் களையும் வென்றவனும் எங்கும் விளங்கித் தோன்றுபவனும் ஆகிய சிவபிரான் உறைவிடம் திருவல்லமாகும்.

கற்றவர் திரு வல்லம் கண்டு சென்று,
நல்-தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன
குற்றம் இல் செந்தமிழ் கூற வல்லார்
பற்றுவர், ஈசன் பொன்பாதங்களே.

10
கற்றவர்கள் வாழும் திருவல்லத்தைத் தரிசித்துச் சென்று நற்றமிழ்வல்ல ஞானசம்பந்தன் பாடிய குற்றமற்ற இச்செந்தமிழ்ப் பதிகத்தைக் கூற வல்லவர்கள் சிவபிரானுடைய அழகிய திருவடிகளை அடைவர்.
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவல்லம்
1.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க; தரித்தவன்,
Tune - வியாழக்குறிஞ்சி   (திருவல்லம் வல்லநாதர் வல்லாம்பிகையம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000