சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருஅன்னியூர் (பொன்னூர்) - குறிஞ்சி தீரசங்கராபரணம் குறிஞ்சி ராகத்தில் திருமுறை அருள்தரு பெரியநாயகியம்மை உடனுறை அருள்மிகு ஆபத்சகாயர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=u-A7eRn23xU   Add audio link Add Audio

மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
அன்னியூர் அமர் மன்னுசோதியே.

1
திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன் பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
குழகன், சேவடி தொழுது வாழ்மினே!

2
இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!

3
நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக.

பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச்
சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.

4
இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர்
மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!

5
மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.
Go to top

இன்பம் வேண்டுவீர்! அன்பன், அன்னியூர்
நன்பொன் என்னுமின், உம்பர் ஆகவே!

6
உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின் தேவர்களாகலாம்.

அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே! என, பந்தம் நீங்குமே.

7
அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்.

தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்து, ஏத்தி வாழ்மினே!

8
காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார், விண்ணுக்கு ஒருவர் ஆவரே.

9
திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

குண்டர் தேரருக்கு அண்டன் அன்னியூர்த்
தொண்டு உளார் வினை விண்டு போகுமே.

10
சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.
Go to top

பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்,
வேந்தன் அன்னியூர் சேர்ந்து, வாழ்மினே!

11
பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஅன்னியூர் (பொன்னூர்)
1.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மன்னி ஊர் இறை; சென்னியார்,
Tune - குறிஞ்சி   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)
5.008   திருநாவுக்கரசர்   தேவாரம்   பாறு அலைத்த படுவெண் தலையினன்;
Tune - திருக்குறுந்தொகை   (திருஅன்னியூர் (பொன்னூர்) ஆபத்சகாயர் பெரியநாயகியம்மை)

This page was last modified on Thu, 11 Dec 2025 05:33:28 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org