பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடி ஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால் ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்! உம குணங்களே.
|
1
|
திருஓத்தூரில் அழகிய கையில் ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய் எழுந்தருளிய கூத்தரே ஆராயுமிடத்து பூசைக்குரிய நறுமலர்களைத் தேர்ந்து பறித்தும் ஏனைய உபகரணங்களைச் சேகரித்துக் கொண்டு உம் குணநலங்களைப் போற்றி பொன் போன்ற திருவடிகளை ஏத்தி வணங்காதார் இல்லை. | |
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர் புடையீரே! புள்ளிமான் உரி உடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச் சடையீரே! உம தாளே.
|
2
|
திருஓத்தூரில் சடைமுடியோடு விளங்கும் இறைவரே ஈர்க்கு இடையில் செல்லாத நெருக்கமான இளமுலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே புள்ளிமான் தோலை ஆடையாக உடுத்தியவரே உம் திருவடிகளை நாங்கள் வணங்குகிறோம். | |
உள்வேர் போல நொடிமையினார் திறம் கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்! ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க் கள்வீரே! உம காதலே!
|
3
|
ஒளிசிறந்த வாழைக் கனிகள் தேன் போன்ற சாற்றைச் சொரியும் திருவோத்தூரில் அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே உம் காதல் மிக நன்று. பொய் பேசும் இயல்பினராய் அடியார்களை நினைப்பவரைப் போலக் காட்டி அவரை ஏற்றுக் கொள்வீர். | |
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தை ஆட்டீரே! அடியார் வினை ஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர் நாட்டீரே! அருள் நல்குமே!
|
4
|
செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலைநாகத்தை ஆட்டுபவரே! அடியவர் வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர் நாட்டில் எழுந்தருளியவரே! உம்மைத் துதிக்கின்றோம்; அருள்புரிவீராக. | |
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படை உழை ஆள்வீர்! திரு ஓத்தூர் பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார் அழையாமே அருள் நல்குமே!
|
5
|
குழையணிந்த காதினை உடையவரே கொடிய மழு என்னும் வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில் ஏந்தி ஆள்பவரே திருவோத்தூரில் பிழை நேராதபடி வண்ணப் பாடல்கள் பல பாடிநின்று ஆடும் அடியார்க்கு அழையாமலே வந்து அருள் நல்குவீராக. | |
| Go to top |
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத் தக்கார் தம் மக்களீர் என்று உட்காதார் உளரோ? திரு ஓத்தூர் நக்கீரே! அருள் நல்குமே!
|
6
|
திருவோத்தூரில் மகிழ்ந்து உறையும் இறைவரே நீர் பலிகொள்ள வருங்காலத்து உம்திருமுன் அன்பு மிக்கவராய் விரும்பி வந்து பலியிடுதற்குத் தம் மக்களுள் மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்தை தாயர் உளரோ? எவ்வாறேனும் ஆக அவர் தமக்கு அருள் நல்குவீராக. | |
தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை நாதா! என்று நலம் புகழ்ந்து ஓதாதார் உளரோ? திரு ஓத்தூர் ஆதீரே! அருள் நல்குமே!
|
7
|
திருவோத்தூரில் முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம் பொருந்திய கொன்றை மலர் விளங்கும் திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப் புகழ்ந்து ஓதாதவர் உளரோ? அருள் நல்குவீராக. | |
என்தான் இம் மலை! என்ற அரக்கனை வென்றார் போலும், விரலினால்; ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர் என்றார் மேல் வினை ஏகுமே.
|
8
|
இக்கயிலைமலை எம்மாத்திரம் என்று கூறிய இராவணனைக் கால்விரலால் வென்றவரும் தம்மோடு மனம் பொருந்தாத திரிபுரத்தசுரர்தம் மும்மதில்களைக் கணையால் எய்து அழித்தவருமாகிய சிவபிரானது திருவோத்தூர் என்று ஊர்ப்பெயரைச் சொன்ன அளவில் சொல்லிய அவர்மேல் உள்ள வினைகள் போகும். | |
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச் சென்றார் போலும், திசை எலாம் ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர் நின்றீரே! உமை நேடியே!
|
9
|
திருவோத்தூரில் விளங்கும் இறைவரே! நல்லன செய்யும் நான்கு வேதங்களை ஓதுபவனாகிய பிரமன். திருமால் ஆகியோர் எரியுருவாய் நீர் ஒன்றுபட்டுத் தோன்றவும் அறியாராய் திசையனைத்தும் தேடித் திரிந்து எய்த்தனர். அவர்தம் அறிவுநிலை யாதோ? | |
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர் தேரர், சொல் அவை தேறன் மின்! ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச் சீரவன், கழல் சேர்மினே!
|
10
|
கரிய நிறத்தவராகிய சமணர்களும் கலிங்க நாட்டுத்துவர் ஏற்றிய ஆடையை அணிந்த புத்தத் துறவியரும் கூறும் பொய் மொழிகளை நம்பாதீர். முப்புரங்களை ஓரம்பினால் எய்து அழித்தவனாகிய திருவோத்தூரில் விளங்கும் சிறப்பு மிக்க சிவபிரானின் கழல்களைச் சேர்வீர்களாக. | |
| Go to top |
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் அரும்பு கொன்றை அடிகளை, பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் விரும்புவார் வினை வீடே.
|
11
|
திருவோத்தூரில் ஆண் பனைகள் குரும்பைக் குலைகளை ஈனும் அற்புதத்தைச் செய்தருளிய கொன்றை அரும்பும் சடைமுடி உடைய இறைவரைப் பெருமை மிக்க திருப்புகலி என்னும் பெயருடைய சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றியுரைத்த இப்பாமாலையை விரும்பும் அன்பர்களின் வினைகள் அழியும். | |