குண்டைக் குறள் பூதம் குழும, அனல் ஏந்தி, கெண்டை பிறழ் தெண் நீர்க் கெடில வடபக்கம், வண்டு மருள் பாட, வளர் பொன் விரி கொன்றை விண்ட தொடையலான் ஆடும், வீரட்டானத்தே.
|
1
|
பருத்த குள்ளமான பூதகணங்கள் தன்னைச் சூழ்ந்து நிற்கக் கையில் அனலை ஏந்தியவனாய் வண்டுகள் மருளிந்தளப்பண்பாட பொன்போன்று விரிந்து மலர்ந்த கொன்றை மலர் மாலை அணிந்தவனாய்ச் சிவபிரான் கெண்டை மீன்கள் பிறழ்ந்து விளையாடும் தெளிந்த நீரை உடைய கெடில நதியின் வடகரையில் உள்ள திருவதிகை வீரட்டானத்து ஆடுவான். | |
அரும்பும் குரும்பையும் அலைத்த மென் கொங்கைக் கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி, சுரும்பு உண் விரிகொன்றைச் சுடர் பொன் சடை தாழ, விரும்பும் அதிகையுள் ஆடும், வீரட்டானத்தே.
|
2
|
சிவபிரான் தாமரை அரும்பு குரும்பை ஆகிய வற்றை அழகால் வென்ற மென்மையான தனங்களையும் கரும்பு போன்ற இனிய மொழிகளையும் உடைய உமையம்மையோடு கூடிக் கையில் அனல் ஏந்தி வீசிக் கொண்டு வண்டுகள் தேனுண்ணும் இதழ் விரிந்த கொன்றை மாலை அணிந்த ஒளிமயமான பொன் போன்ற சடைகள் தாழத் தன்னால் பெரிதும் விரும்பப்படும் அதிகை வீரட்டானத்து ஆடுவான். | |
ஆடல் அழல் நாகம் அரைக்கு இட்டு அசைத்து ஆட, பாடல் மறை வல்லான் படுதம் பலி பெயர்வான், மாட முகட்டின் மேல் மதி தோய் அதிகையுள், வேடம் பல வல்லான் ஆடும், வீரட்டானத்தே.
|
3
|
வென்றியையும் அழல் போலும் கொடிய தன்மை யையும் கொண்ட நாகத்தை இடையில் பொருந்தக் கட்டி ஆடுமாறு செய்து பாடப்படும் வேதங்களில் வல்லவனாய் `படுதம்` என்னும் கூத்தினை ஆடிக்கொண்டு பலி தேடித் திரிபவனாய சிவபிரான் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்த மாடவீடுகளை உடைய திருவதிகையிலுள்ள வீரட்டானத்தில் பல்வேறு கோலங்களைக் கொள்ளுதலில் வல்லவனாய் ஆடுவான். | |
எண்ணார் எயில் எய்தான்; இறைவன்; அனல் ஏந்தி; மண் ஆர் முழவு அதிர, முதிரா மதி சூடி, பண் ஆர் மறை பாட, பரமன்-அதிகையுள், விண்ணோர் பரவ, நின்று ஆடும், வீரட்டானத்தே.
|
4
|
பகைவரது திரிபுரங்களை எய்து அழித்த இறைவன் அனலைக் கையில் ஏந்தி மார்ச்சனை இடப்பட்ட முழவு முழங்க இளம் பிறையை முடியில் சூடிப் பண்ணமைப்புடைய வேதங்களை அந்தணர் ஓதத் திருவதிகை வீரட்டானத்தே தேவர்கள் போற்ற நின்று ஆடுவான். | |
கரிபுன்புறம் ஆய கழிந்தார் இடுகாட்டில், திரு நின்று ஒரு கையால், திரு ஆம் அதிகையுள், எரி ஏந்திய பெருமான், எரிபுன் சடை தாழ, விரியும் புனல் சூடி, ஆடும், வீரட்டானத்தே.
|
5
|
கரிந்த புல்லிய ஊர்ப்புறமாய இறந்தவர்களை எரிக்கும் சுடுகாட்டில் ஒரு திருக்கரத்தில் எரி ஏந்தி ஆடும் பெருமான் திருமகள் நிலைபெற்ற திருவதிகையில் உள்ள வீரட்டானத்தில் எரிபோன்று சிவந்த தன் சடைகள் தாழ்ந்து விரிய தலையில் கங்கை சூடி ஆடுவான். | |
| Go to top |
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி, இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி, வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள், விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.
|
6
|
அசைந்து எரியும் அனலை அழகிய கையில் பொருந்த ஏந்தி விளையாடி இளங்கொம்பு போன்ற உமையம்மையோடு இசைபாடி வளமை உள்ள புனல் சூழ்ந்த வயல்களை உடைய திருவதிகையில் வீரட்டானத்தே முடிமிசை விளங்கும் பிறைசூடி ஆடுவான். | |
பாதம் பலர் ஏத்த, பரமன், பரமேட்டி தம் புடை சூழ, புலித்தோல் உடை ஆக, கீதம் உமை பாட, கெடில வடபக்கம், வேத முதல்வன் நின்று ஆடும், வீரட்டானத்தே.
|
7
|
பரம்பொருளாகிய பரமன் தன் திருவடிகளைப் பலரும் பரவி ஏத்தி வணங்கவும் பூதகணங்கள் புடை சூழவும் புலித்தோலை உடுத்து உமையம்மை கீதம் பாடக் கெடிலநதியின் வடகரையில் வேதமுதல்வனாய் வீரட்டானத்தே ஆடுவான். | |
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட, ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள், பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி, வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.
|
8
|
கற்கள் பொருந்திய கயிலை மலையை எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறு அடர்த்துப் பின் அவனுக்கு அருள் பல செய்தும் முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும் தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய இறைவன் பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடித்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான். | |
நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்; பொடி ஆடு மார்பானை, புரிநூல் உடையானை, கடி ஆர் கழு நீலம் மலரும் அதிகையுள், வெடி ஆர் தலை ஏந்தி, ஆடும், வீரட்டானத்தே.
|
9
|
பேருருக் கொண்ட திருமாலும் நான்முகனும் அழ லுருவாய் ஓங்கி நிமிர்ந்தவனை திருநீறணிந்த மார்பினனை முப்புரிநூல் அணிந்தவனைக் காண்கிலார்: அப்பெருமான் மணம் கமழும் நீலப்பூக்கள் மலரும் திருவதிகையிலுள்ள வீரட்டானத்தே முடைநாற்றமுடைய தலை ஓட்டைக் கையில் ஏந்தி ஆடுகின்றான். | |
அரையோடு அலர் பிண்டி மருவிக் குண்டிகை சுரை ஓடு உடன் ஏந்தி, உடை விட்டு உழல்வார்கள் உரையோடு உரை ஒவ்வாது; உமையோடு உடன் ஆகி, விரை தோய் அலர்தாரான் ஆடும், வீரட்டானத்தே.
|
10
|
அரச மரத்தையும் தழைத்த அசோக மரத்தையும் புனித மரங்களாகக் கொண்டு குண்டிகையாகச் சுரைக்குடுக்கையை ஏந்தித்திரியும் புத்தர்கள் ஆடையற்றுத் திரியும் சமணர்கள் ஆகியவர்களின் பொருந்தாத வார்த்தைகளைக் கேளாதீர். மணம் கமழும் மாலை அணிந்த சிவபிரான் உமையம்மையோடு உடனாய் அதிகை வீரட்டானத்தே ஆடுவான். அவனை வணங்குங்கள். | |
| Go to top |
ஞாழல் கமழ் காழியுள் ஞானசம்பந்தன், வேழம் பொரு தெண் நீர் அதிகை வீரட்டானத்துச் சூழும் கழலானைச் சொன்ன தமிழ்மாலை, வாழும் துணை ஆக நினைவார் வினை இலாரே.
|
11
|
ஞாழற் செடிகளின் மலர்கள் மணம் கமழும் சீகாழியுள் தோன்றிய ஞானசம்பந்தன் நாணல்களால் கரைகள் அரிக்கப்படாமல் காக்கப்படும் தெளிந்த நீர்வளம் உடைய திருவதிகை வீரட்டானத்தில் ஆடும் கழல் அணிந்த அடிகளை உடைய சிவபிரானைப் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை வாழ்வுத் துணையாக நினைபவர் வினையிலராவர். | |