கரவு இன்றி நல்மாமலர் கொண்டு
இரவும் பகலும் தொழுவார்கள்
சிரம் ஒன்றிய செஞ்சடையான் வாழ்
வர மா மயிலாடுதுறையே.
|
1
|
நெஞ்சிற் கரவின்றி மணம் மிக்க சிறந்த மலர்கள் பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு தலைமாலை பொருந்தும் செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். வள்ளன்மையுடையான் உகந்தருளும் இடமுமாம். | |
உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதி என்பர் குரவம், சுரபுன்னையும், வன்னி, மருவும் மயிலாடுதுறையே.
|
2
|
வலிமை பொருந்திய கொடியயானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும் பதி குராமரம் சுரபுன்னை வன்னி ஆகிய மரங்கள் செறிந்த திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும். | |
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில், ஞானப்பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர் வு ஆன மயிலாடுதுறையே!
|
3
|
இப்பிறப்பில் நமக்குள்ள குறைபாடாகிய ஆணவம் என்னும் இருள் நம்மை விட்டு நீங்க வேண்டில் ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்குங்கள். தேனை ஒத்து இனியனாய் விளங்கும் அப்பெருமான் தனக்குச் சேர்வான மயிலாடுதுறையில் விரும்பி உறைகிறான். | |
அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற மஞ்சன் மயிலாடுதுறையை நெஞ்சு ஒன்றி நினைந்து எழுவார்மேல் துஞ்சும், பிணி ஆயினதானே.
|
4
|
ஐம்பொறிகளைப் பற்றும் ஒள்ளிய புலன்களாகிய அவைகளைக் கெடுத்த பெருவீரனாகிய சிவபெருமான் எழுந்தருளிய மயிலாடுதுறையை மனம் ஒன்றி நினைந்து வழிபட எழுவார் மேல் வரும் பிறவி முதலாகிய பிணிகள் அழிந்தொழியும். | |
தணி ஆர் மதி செஞ்சடையான்தன் அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும் பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும் மணியான், மயிலாடுதுறையே.
|
5
|
குளிர்ந்த பிறைமதியை அணிந்துள்ள சிவந்த சடை முடியை உடையவனாகிய சிவபெருமானை அணுகியவருக்கு என்றும் அருள் உளதாம். பிணி முதலானவற்றைப் போக்கி அருள்புரியும் மணி போன்றவனாய் அப்பெருமான் மயிலாடுதுறையில் உள்ளான். | |
| Go to top |
தொண்டர் இசை பாடியும் கூடிக் கண்டு துதி செய்பவன் ஊர் ஆம் பண்டும் பல வேதியர் ஓத, வண்டு ஆர் மயிலாடுதுறையே.
|
6
|
தொண்டர்களாயுள்ளவர்கள் கூடி இசை பாடியும் தரிசித்தும் துதிக்கும் சிவபெருமானது ஊர் முற்காலத்தும் இக்காலத்தும் வேதியர்கள் வேதங்களை ஓதித்துதிக்க வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த மயிலாடுதுறையாகும். | |
அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து இணங்கி அருள் செய்தவன் ஊர் ஆம் நுணங்கும் புரிநூலர்கள் கூடி வணங்கும் மயிலாடுதுறையே.
|
7
|
உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று வீற்றிருந்து அருள் புரிபவன் ஊர் முப்புரி நூல் துவளும் அந்தணர்கள் கூடி வணங்கும் திருமயிலாடுதுறை ஆகும். | |
சிரம் கையினில் ஏந்தி இரந்த பரம் கொள் பரமேட்டி, வரையால் அரங்க அரக்கன் வலி செற்ற, வரம் கொள் மயிலாடுதுறையே.
|
8
|
பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலர் இல்லங்களிலும் சென்று இரந்த மேன்மை கொண்டவன் சிவபிரான். கயிலை மலையால் இராவணனை நெரியுமாறு அடர்த்த நன்மையாளனாகிய அப்பெருமானை அடியவர் வணங்கி நன்மைகளைப் பெறும் தலம் திருமயிலாடுதுறை. | |
ஞாலத்தை நுகர்ந்தவன் தானும், கோலத்து அயனும், அறியாத சீலத்தவன் ஊர் சிலர் கூடி மாலைத் தீர் மயிலாடுதுறையே.
|
9
|
உலகை விழுங்கித் தன் வயிற்றகத்தே வைத்த திரு மாலும் அழகிய நான்முகனும் அறியாத தூயவனாகிய சிவபெருமானது ஊர் அடியவர் ஒருங்கு கூடி வழிபட்டுத் தம் அறியாமை நீங்கப் பெறும் சிறப்புடைய திருமயிலாடுதுறை ஆகும். | |
நின்று உண் சமணும், நெடுந் தேரர், ஒன்று அறியாமை உயர்ந்த வென்றி அருள் ஆனவன் ஊர் ஆம் மன்றல் மயிலாடுதுறையே.
|
10
|
நின்றுண்பவர்களாகிய சமணர்களும் நெடிதுயர்ந்த புத்தர்களும் ஒரு சிறிதும் தன்னை அறியாதவர்களாய் ஒழியத் தான் உயர்ந்த வெற்றி அருள் இவைகளைக் கொண்டுள்ள சிவபெருமானது ஊர் நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை ஆகும். | |
| Go to top |
நயர் காழியுள் ஞானசம்பந்தன் மயர் தீர் மயிலாடுதுறைமேல் செயலால் உரை செய்தன பத்தும் உயர்வு ஆம், இவை உற்று உணர்வார்க்கே.
|
11
|
ஞானத்தினால் மேம்பட்டவர் வாழும் சீகாழிப்பதியுள் வாழும் ஞானசம்பந்தன் தன்னை வழிபடுவாரின் மயக்கத்தைத் தீர்த்தருளும் மயிலாடுதுறை இறைவனைப் பற்றித் திருவருள் உணர்த்தும் செயலால் உரைத்தனவாகிய இத்திருப்பதிகப் பாடல் களாகிய இவை பத்தும் உற்றுணர்வார்க்கு உயர்வைத் தரும். | |