செப்பம் நெஞ்சே, நெறி கொள்! சிற்றின்பம் துப்பன் என்னாது, அருளே துணை ஆக, ஒப்பர் ஒப்பர் பெருமான், ஒளி வெண் நீற்று அப்பர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
1
|
நெஞ்சே முறையான சிற்றின்பத்தைத் தன் முனைப்போடு `யான் துய்ப்பேன்` என்னாது `அருளே துணையாக நுகர்வேன்` என்று கூற இறைவர் அதனை ஏற்பர். அத்தகைய பெருமானார் ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய் விளங்கும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம். | |
பாலும் நெய்யும் தயிரும் பயின்று ஆடி, தோலும் நூலும் துதைந்த வரைமார்பர், மாலும் சோலை புடை சூழ் மடமஞ்ஞை ஆலும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
2
|
பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பியாடிப் புலித்தோலும் முப்புரிநூலும் பொருந்திய மலை போன்று விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய மயக்கும் சோலைகளால் சூழப்பெற்ற இளமயில்கள் ஆரவாரிக்கும் திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். | |
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர், கை கொள் வேலர், கழலர், கரிகாடர், தையலாள் ஒரு பாகம் ஆய எம் ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
3
|
சிவந்த திருமேனியரும் செம்மை நிறமுடைய சடைமுடியினரும் விடையூர்ந்து வருபவரும் கையில் பற்றிய சூலத்தினரும் வீரக்கழல் அணிந்தவரும் இடுகாட்டில் விளங்குபவரும் உமையம்மையைத் தன்மேனியில் ஒரு கூறாகக் கொண்டவருமான எம் தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். | |
பிணி கொள் ஆக்கை ஒழிய, பிறப்பு உளீர்! துணி கொள் போரார், துளங்கும் மழுவாளர், மணி கொள் கண்டர், மேய வார் பொழில் அணி கொள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
4
|
நோய்கட்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த எண்ணும் அறிவுடையவர்களே துணித்தலைச் செய்வதும் போர் செய்தற்கு உரியதுமான விளங்கும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவரும் நீலமணி போன்ற கண்டத்தை உடையவருமான சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த அழகிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோமாக. | |
பிறையும் அரவும் புனலும் சடை வைத்து, மறையும் ஓதி, மயானம் இடம் ஆக உறையும் செல்வம் உடையார், காவிரி அறையும் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
5
|
இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்து நான்மறைகளை ஓதிக் கொண்டு சுடுகாட்டைத் தமது இடமாகக் கொண்டு உறையும் வீடு பேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம். | |
| Go to top |
துடிகளோடு முழவம் விம்மவே, பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக, படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும் அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
6
|
உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது திருநீற்றுப்பொடி பூசி புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு பொருத்தமான தாளச்சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும் அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்று அடைவோம். | |
சாடிக் காலன் மாள, தலைமாலை சூடி, மிக்குச் சுவண்டு ஆய் வருவார், தாம் பாடி ஆடிப் பரவுவார் உள்ளத்து ஆடி, சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
7
|
காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்துத் தலைமாலைகளை அணிந்து பொருத்தம் உடையவராய் வருபவரும் பாடி ஆடிப் பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான் எழுந்தருளிய திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். | |
பெண் ஓர்பாகம் உடையார், பிறைச் சென்னிக் கண் ஓர்பாகம் கலந்த நுதலினார், எண்ணாது அரக்கன் எடுக்க ஊன்றிய அண்ணல், சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
8
|
ஒருபாகமாக உமையம்மையை உடையவரும் பிறையணிந்த சென்னியரும் தமது திருமேனியில் ஒருபாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும் இராவணன் பின்விளையும் தீமையை எண்ணாது கயிலை மலையைப் பெயர்க்க அவனது முனைப்பை அடக்கக் கால்விரலை ஊன்றிய தலைமைத் தன்மை உடையவருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத்துறையைச் சென்றடைவோம். | |
தொழுவார் இருவர் துயரம் நீங்கவே அழல் ஆய் ஓங்கி அருள்கள் செய்தவன், விழவு ஆர் மறுகில் விதியால் மிக்க எம் எழில் ஆர் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
9
|
தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரமன் ஆகிய இருவர்க்கும் அழலுருவாய் ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன் விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேதவிதியோடு வாழும் மக்களை உடைய சோற்றுத்துறையைச் சென்றடைவோம். | |
கோது சாற்றித் திரிவார், அமண் குண்டர், ஓதும் ஓத்தை உணராது எழு, நெஞ்சே! நீதி நின்று நினைவார் வேடம் ஆம் ஆதி சோற்றுத்துறை சென்று அடைவோமே.
|
10
|
நெஞ்சே! குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண் குண்டர்கள் ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது சிவாகம நெறி நின்று நினைப்பவர் கருதும் திருவுருவோடு வெளிப்பட்டருளும் முதல்வனாகிய சிவபிரானது சோற்றுத்துறையை நாம் சென்றடைவோம். | |
| Go to top |
அம் தண் சோற்றுத்துறை எம் ஆதியைச் சிந்தை செய்ம்மின், அடியர் ஆயினீர்! சந்தம் பரவு ஞானசம்பந்தன் வந்த ஆறே புனைதல் வழிபாடே.
|
11
|
அடியவர்களாக உள்ளவர்களே! அழகு தண்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள். சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தைத் தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவற்கு நாம் செய்யும் வழிபாடாகும். | |