சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

1.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

சீர்காழி - நட்டபாடை சலநாட்டை கம்பீரநாட்டை ராகத்தில் திருமுறை அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி
- Hide Meaning   https://www.youtube.com/watch?v=_9i0IZC_y7U   Add audio link Add Audio

பிறை அணி படர் சடை முடி இடைப் பெருகிய புனல்  உடையவன்; நிறை
இறை அணி வளை, இணை முலையவள், இணைவனது எழில் உடை இட வகை
கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்;
நறை அணி மலர் நறுவிரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே!

1
பிறை அணிந்த விரிந்த சடைமுடியின்கண் பெருகிவந்த கங்கையை உடைய இறைவனும் முன்கையில் அழகிய வளையலை அணிந்த உமையம்மையின் இரண்டு தனபாரங்களோடு இணைபவனும் அழகிய இடவகைகளில் ஒன்றான நிழல்மிக்க பொழில்கள் நிறைந்ததும் நெல்வயல்கள் அணி செய்வதுமாகிய திருக்கழுமலத்தில் எழுந்தருளியுள்ள அழல் போன்ற சிவந்த மேனியனுமாகிய சிவபிரானின் தேன்நிறைந்த மலர்களின் நறுமணம் செறிந்த அழகிய திருவடிகளைத் தொழுதல் செய்மின்கள்.

பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது; உளது அது பெருகிய திரை;
அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன், அவிர் சடை மிசை
தணிபடு கதிர் வளர் இளமதி புனைவனை, உமைதலைவனை, நிற
மணி படு கறைமிடறனை, நலம் மலி கழல் இணை தொழல் மருவுமே!

2
இடைவிடாமல் நம்மைப் பிணிக்கும் கடல் போன்ற பிறவிகள் நீங்குதல் எளிதாகும். அப்பிறவிக்கடல் மிகப் பெரிதாகிய துன்ப அலைகளை உடையது. ஆதலின் அழகிய கழுமலத்துள் இனிதாக அமர்கின்ற அழலுருவினனும் விரிந்த சடைமீது குளிர்ந்த கிரணங்களை உடைய பிறைமதியைச் சூடியவனும் உமையம்மையின் மணாளனும் நீலமணிபோலும் நிறத்தினை உடைய கறைக்கண்டனும் ஆகிய சிவபிரானின் நலம் நிறைந்த திருவடிகளைத் தொழுதல் செய்மின்.

வரி உறு புலி அதள் உடையினன், வளர்பிறை ஒளி கிளர்  கதிர் பொதி
விரி உறு சடை, விரை புழை பொழில் விழவு ஒலி மலி கழுமலம் அமர்
எரி உறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தமது
எரி உறு வினை, செறிகதிர் முனை இருள் கெட, நனி நினைவு எய்துமதே.

3
கோடுகள் பொருந்திய புலியின் தோலை ஆடையாக உடுத்தவனாய் ஒளி மிக்குத்தோன்றும் கிரணங்களையுடைய வளர்பிறையை அணிந்த சடையை உடையவனாய் மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்ததும் திருவிழாக்களின் ஒலி நிறைந்ததும் ஆகிய கழுமலத்துள் அழல் வண்ணனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை இரவும் பகலும் பரவுகின்றவர்களின் வருத்துகின்ற வினைகள் மிக்க ஒளியை உடைய ஞாயிற்றின் முன் இருள் போலக் கெட்டொழியும். ஆதலால் அப்பெருமான் திருவடிகளை நன்றாக நினையுங்கள்.

வினை கெட மன நினைவு அது முடிக எனின், நனி தொழுது எழு குலமதி
புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்,
மனை குடவயிறு உடையனசில வரு குறள் படை உடையவன், மலி
கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினன், அதிர் கழல்களே!

4
உயர்ந்த பிறை மதி கொடிபோன்ற இடையையுடைய கங்கை மந்திரப் பொருளால் உண்டாக்கப்பட்டுத் தோன்றிய யானையின் தோல் இவற்றை உடைய உடலினனும் வீட்டுக் குடம் போலும் வயிற்றினை உடைய பூதங்கள் சிலவற்றின் படையை உடையவனும் ஆரவாரம் நிறைந்த கடற்கரையை அடுத்த கழுமலத்துள் ஞாயிறு திங்கள் ஆகியவற்றைக் கண்களாகக் கொண்டு அமர்ந்தவனுமாகிய சிவபெருமானின் ஒலிக்கும் கழற் சேவடிகளை வினைகள் கெடவும் மனத்தில் நினைவது முடியவும் வேண்டின் நன்கு தொழுதெழுக.

தலைமதி, புனல், விட அரவு, இவை தலைமையது ஒரு சடை இடை உடன்-
நிலை மருவ ஓர் இடம் அருளினன்; நிழல் மழுவினொடு அழல் கணையினன்;
மலை மருவிய சிலைதனில் மதில் எரியுண மனம் மருவினன்-நல
கலை மருவிய புறவு அணிதரு கழுமலம் இனிது அமர் தலைவனே.

5
நல்ல கலைமான்கள் பொருந்திய சிறுகாடுகள் புறத்தே அழகு பெறச் சூழ்ந்துள்ள கழுமலத்தில் இனிதாக எழுந்தருளிய இறைவன் ஒரு நாட்பிறை கங்கை நஞ்சு பொருந்திய பாம்பு ஆகியவற்றுக்குத் தன் தலைமையான சடைக் காட்டின் நடுவில் ஒன்றாக இருக்குமாறு இடம் அருளியவன். ஒளி பொருந்திய மழுவோடு அழல் வடிவான அம்பினை மேருமலையாகிய வில்லில் பூட்டி எய்தலால் திரிபுரங்கள் எரியுண்ணுமாறு மனத்தால் சிந்தித்தவன்.
Go to top

வரை பொருது இழி அருவிகள் பல பருகு ஒரு கடல் வரி மணல் இடை,
கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்;
அரை பொரு புலி அதள் உடையினன்; அடி இணை தொழ, அருவினை எனும்
உரை பொடி பட உறு துயர் கெட, உயர் உலகு எய்தல் ஒருதலைமையே.

6
மலைகளைப் பொருது இழிகின்ற அருவிகள் பலவற்றைப் பருகுகின்ற பெரிய கடலினை அடுத்துள்ளவரிகளாக அமைந்த மணற் பரப்பில் அமைந்ததும் கரையைப் பொரும் கடல் அலைகளின் ஒசை எப்போதும் கேட்கின்றதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளியுள்ளவனும் கனல் போலும் சிவந்த திருமேனியனும் இடையிலே கட்டிய புலித்தோலை உடையவனுமாகிய சிவபிரானின் இணை அடிகளைத் தொழின் போக்குதற்கு அரியனவாகிய வினைகள் என்னும் வார்த்தையும் பொடிபட மிக்க துயர்கள் நீங்க உயர்ந்த உலகமாகிய வீட்டுலகத்தைப் பெறுதல் நிச்சயமாகும்.

முதிர் உறு கதிர் வளர் இளமதி சடையனை, நற நிறை தலைதனில்;
உதிர் உறு மயிர் பிணை தவிர் தசை உடை புலி அதள் இடை; இருள் கடி
கதிர் உறு சுடர் ஒளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை,
அதிர் உறு கழல், அடிகளது அடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே.

7
மலர்கள் சூடுவதால் தேன் நிறைந்துள்ள திருமுடியில் உலகிற் பயிர்களை முதிர்விக்கும் கிரணங்கள் வளர்கின்ற மதியைச் சூடிய சடையை உடையவனாய் உதிரத்தக்க மயிர் பிணைந்து தசை தவிர்ந்துள்ள புலித்தோலை உடுத்த இடையை உடையவனாய் இருளை நீக்கும் கதிரவனின் சுடரொளி பொருந்திய மழுவாகிய படையை ஏந்திக் கழுமலத்துள் அமர்கின்ற பெருமானின் கழல்கள் அணிந்த திருவடிகளைத் தொழும் அறிவல்லது பிறவற்றை அறியும் அறிவை அறியோம்.

கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல் தெற, அடி சரண்! என,
அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன், அணி கிளர் பிறை,
விடம் நிறை மிடறு உடையவன், விரிசடையவன், விடை உடையவன், உமை
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே.

8
கடல் போன்ற கரிய நிறத்தினனும் நீண்ட முடியை அணிந்தவனும் ஆகிய இராவணனின் வலிமை கெடுமாறு செய்து பின் அவன் திருவடிகளே சரண் என வேண்ட அவனுக்கு வலிமை மிக்கவாட்படை அருளிய புகழுடையவனும் பாம்பை இடையில் கட்டியவனும் அழகுமிக்க பிறையை அணிந்தவனும் விடம் தங்கிய கண்டத்தை உடையவனும் விரித்த சடையை உடையவனும் விடை ஊர்தியனும் ஆகிய பெருமான் உமையம்மையோடு உறையும் பதி கடல் அலைகளையுடைய உயர்ந்த கழுமலம் எனப்படும் பெரிய நகராகும்.

கொழு மலர் உறை பதி உடையவன், நெடியவன், என இவர்களும், அவன்
விழுமையை அளவு அறிகிலர், இறை; விரை புணர் பொழில் அணி விழவு அமர்
கழுமலம் அமர் கனல் உருவினன் அடி இணை தொழுமவர் அருவினை
எழுமையும் இல, நில வகைதனில்; எளிது, இமையவர் வியன் உலகமே.

9
செழுமையான தாமரை மலரை உறையும் இடமாகக் கொண்ட பிரமன் திருமால் ஆகிய இவர்களும் சிவபெருமானது சிறப்பைச் சிறிதும் அறியார். அப்பெருமான் மணம் பொருந்திய பொழில்கள் சூழப் பெற்றதும் அழகிய விழாக்கள் பல நிகழ்வதுமாகிய கழுமலத்துள் எழுந்தருளிய அழல் உருவினன். அப்பெருமானுடைய திருவடி இணைகளைத் தொழுபவர்களின் நீங்குதற்கரிய வினைகள் இப்பூவுலகில் ஏழு பிறப்பின்கண்ணும் இலவாகும். இமையவர்களின் பெரிய உலகத்தை அடைதல் அவர்கட்கு எளிதாகும்.

அமைவன துவர் இழுகிய துகில் அணி உடையினர், அமண் உருவர்கள்,
சமையமும், ஒரு பொருள் எனும் அவை, சல நெறியன, அற உரைகளும்;
இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
நமையல வினை; நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே!

10
தமக்குப் பொருந்துவனவாகிய மருதந்துவர் ஊட்டின ஆடையை அணிந்தவர்களாகிய புத்தர்களும் ஆடையற்ற சமணர்களும் ஒரு பொருள் எனக்கூறும் சமய நெறிகளும் அறவுரைகளும் ஆகிய அவைவஞ்சனை மார்க்கத்தை வகுப்பன என உணர்ந்து தேவர்களால் தொழப்படுகின்ற கழுமலத்துள் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் பரவுவார்களை வினைகள் வருத்தா. நலன் அடைதலின் உயர்நெறிகளை அவர்கள் அடைவார்கள்.
Go to top

பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன், உறை பிணர் திரையொடு
கருகிய நிற விரிகடல் அடை கழுமலம் உறைவு இடம் என நனி
பெருகிய சிவன் அடி பரவிய, பிணை மொழியன, ஒருபதும் உடன்-
மருவிய மனம் உடையவர் மதி உடையவர்; விதி உடையவர்களே.

11
பரந்துபட்ட நூல்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை ஆழ உணர்ந்தவனும் மிக்க புகழாளனும் ஆகிய ஞான சம்பந்தன் நீர்த்துளிகளோடு மடங்கும் அலைகளுடன் கருமை நிறம் வாய்ந்த கடலின் கரையில் விளங்கும் கழுமலம் இறைவனது உறைவிடம் என மிகவும் புகழ் பரவிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடிய அன்பு பிணைந்த இப்பத்துப் பாடல்களையும் ஓதி மனம் பொருந்த வைக்கும் அன்பர்கள் நிறைந்த ஞானமும் நல்லூழும் உடையவராவர்.

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: சீர்காழி
1.019   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பிறை அணி படர் சடை
Tune - நட்டபாடை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.024   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பூஆர் கொன்றைப் புரிபுன் சடை
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.034   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அடல் ஏறு அமரும் கொடி
Tune - தக்கராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.079   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அயில் உறு படையினர்; விடையினர்;
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.081   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லார், தீ மேவும் தொழிலார்,
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.102   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   உரவு ஆர் கலையின் கவிதைப்
Tune - குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.126   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   திருத்தாளச்சதி பதிகம், பந்தத்தால் வந்து எப்பால் பயின்று
Tune - வியாழக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
1.129   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சே உயரும் திண் கொடியான்
Tune - மேகராகக்குறிஞ்சி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.011   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
Tune - இந்தளம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.039   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   ஆரூர், தில்லை அம்பலம், வல்லம்,
Tune - இந்தளம்   (சீர்காழி )
2.049   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பண்ணின் நேர் மொழி மங்கைமார்
Tune - சீகாமரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நலம் கொள் முத்தும் மணியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.075   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும்
Tune - காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.096   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்புரி வளரும் பொற்பு
Tune - பியந்தைக்காந்தாரம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நம் பொருள், நம் மக்கள்
Tune - நட்டராகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
2.113   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொடி இலங்கும் திருமேனியாளர், புலி
Tune - செவ்வழி   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம்   (சீர்காழி )
3.040   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி   (சீர்காழி )
3.043   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
3.118   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.082   திருநாவுக்கரசர்   தேவாரம்   பார் கொண்டு மூடிக் கடல்
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
4.083   திருநாவுக்கரசர்   தேவாரம்   படை ஆர் மழு ஒன்று
Tune - திருவிருத்தம்   (சீர்காழி பிரமபுரீசர் திருநிலைநாயகி)
5.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   மாது இயன்று மனைக்கு இரு!
Tune - திருக்குறுந்தொகை   (சீர்காழி தோணியப்பர் திருநிலைநாயகியம்மை)
7.058   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை
Tune - தக்கேசி   (சீர்காழி பிரமபுரியீசுவரர் திருநிலைநாயகியம்மை)
8.137   மாணிக்க வாசகர்    திருவாசகம்   பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
Tune - அக்ஷரமணமாலை   (சீர்காழி )
11.027   பட்டினத்துப் பிள்ளையார்   திருக்கழுமல மும்மணிக் கோவை   திருக்கழுமல மும்மணிக் கோவை
Tune -   (சீர்காழி )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 30 Dec 2025 15:21:40 +0000