முன்னவன் எங்கள்பிரான் முதல்
காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு
நீல மிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறை
நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ
மண்ணிப் படிக்கரையே. |
1
|
அண்ட கபாலஞ்சென்னி அடி
மேல்அலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழு
தேத்திநின் றாடுமிடம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
யார்கதிர் மூவிலைய
பண்டங்கன் மேயவிடம் பழ
மண்ணிப் படிக்கரையே. |
2
|
ஆடுமின் அன்புடையீர் அடிக்
காட்பட்ட தூளிகொண்டு
சூடுமின் தொண்டருள்ளீர் உம
ரோடெமர் சூழவந்து
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்
தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழ
மண்ணிப் படிக்கரையே. |
3
|
அடுதலை யேபுரிந்தான் அவை
அந்தர மூவெயிலும்
கெடுதலை யேபுரிந்தான் கிள
ருஞ்சிலை நாணியிற்கோல்
நடுதலை யேபுரிந்தான் நரி
கான்றிட்ட எச்சில்வெள்ளைப்
படுதலை யேபுரிந்தான் பழ
மண்ணிப் படிக்கரையே. |
4
|
உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித்தொழு மின்தொண்டீர்
மங்கையொர் கூறுடையான் வா
னோர்முத லாயபிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
பங்கய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே. |
5
|
| Go to top |
செடிபடத் தீவிளைத்தான் சிலை
யார்மதிற் செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை எரு
தேற்றையும் ஏறக்கொண்டான்
கடியவன் காலன்றன்னைக் கறுத்
தான்கழற் செம்பவளப்
படியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே. |
6
|
கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி
லாயநன் மாமலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்
கன்முடி பத்தலற
விடுத்தவன் கைநரம்பால் வேத
கீதங்கள் பாடலுறப்
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ
மண்ணிப் படிக்கரையே. |
7
|
திரிவன மும்மதிலும் மெரித்
தான்இமை யோர்பெருமான்
அரியவன் அட்டபுட்பம் மவை
கொண்டடி போற்றிநல்ல
கரியவன் நான்முகனும் மடி
யும்முடி காண்பரிய
பரியவன் பாசுபதன் பழ
மண்ணிப் படிக்கரையே. |
8
|
வெற்றரைக் கற்றமணும் விரை
யாதுவிண் டாலமுண்ணும்
துற்றரைத் துற்றறுப்பான் துன்ன
ஆடைத் தொழிலுடையீர்
பெற்றரைப் பித்தரென்று கரு
தேன்மின் படிக்கரையுள்
பற்றரைப் பற்றிநின்று பழி
பாவங்கள் தீர்மின்களே. |
9
|
பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
மண்ணிப் படிக்கரையை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்
குந்தமர்க் குங்கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் மிடர்
கூருதல் இல்லையன்றே. |
10
|
| Go to top |