சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை thalam திருப்புறவம்
1.074   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நறவம் நிறை வண்டு அறை
பண் - தக்கேசி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=bRUUHP2wuvg
1.097   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
பண் - குறிஞ்சி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=U4x9pIXwrqs
3.084   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பெண் இயல் உருவினர், பெருகிய
பண் - சாதாரி   (திருப்புறவம் பிரமபுரீசர் திருநிலைநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=IBQf-wnI-Qo

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.074   நறவம் நிறை வண்டு அறை  
பண் - தக்கேசி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால்
சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான்,
புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த
இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[1]
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட நாகம்
விரவி விரி பூங்கச்சா அசைத்த விகிர்தன், உகிர்தன்னால்
பொரு வெங்களிறு பிளிற உரித்து, புறவம் பதி ஆக,
இரவும் பகலும் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[2]
பந்தம் உடைய பூதம் பாட, பாதம் சிலம்பு ஆர்க்க,
கந்தம் மல்கு குழலி காண, கரிகாட்டு எரி ஆடி,
அம் தண்கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி,
எம் தம்பெருமான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[3]
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்;
கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை,
புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக,
எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[4]
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண் திங்களும்,
தங்கு சடையன்; விடையன்; உடையன், சரி கோவண ஆடை;
பொங்கு திரை வண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
எங்கும் பரவி இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[5]
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப் போய்,
அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து,
புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதி ஆக,
என்னை உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[6]
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம்தேவர்
விண்ணில் பொலிய, அமுதம் அளித்த விடை சேர் கொடி அண்ணல்,
பண்ணில் சிறைவண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதி ஆக,
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[7]
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன்
திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக,
எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[8]
நெடியான் நீள் தாமரை மேல் அயனும் நேடிக் காண்கில்லாப்
படி ஆம் மேனி உடையான், பவளவரை போல்-திருமார்பில்
பொடி ஆர் கோலம் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
இடி ஆர் முழவு ஆர் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[9]
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு இல் சிறுதேரர்,
கோலும் மொழிகள் ஒழிய, குழுவும் தழலும் எழில் வானும்
போலும் வடிவும் உடையான், கடல் சூழ் புறவம் பதி ஆக,
ஏலும் வகையால் இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.

[10]
பொன் ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதி ஆக
மின் ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனை,
தன் ஆர்வம் செய் தமிழின் விரகன் உரைத்த தமிழ்மாலை
பல்-நாள் பாடி ஆட, பிரியார், பரலோகம்தானே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.097   எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று  
பண் - குறிஞ்சி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச்
செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும்
பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.

[1]
மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர்போலும்
மாதவி மேய வண்டு இசை பாட, மயில் ஆட,
போது அலர் செம்பொன் புன்னை கொடுக்கும் புறவமே.

[2]
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
புற்று ஆடு அரவின் படம் ஆடவும், இப் புவனிக்கு ஓர்
பற்று ஆய், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன்தாமரையின் பொய்கை நிலாவும் புறவமே.

[3]
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து,
மின் ஆர் சடைமேல் அரவும் மதியும் விளையாட,
பல்-நாள், இடுமின், பலி! என்று அடைவார் பதிபோலும்
பொன் ஆர் புரிநூல் அந்தணர் வாழும் புறவமே.

[4]
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

[5]
கற்று அறிவு எய்தி, காமன் முன் ஆகும் உகவு எல்லாம்
அற்று, அரனே! நின் அடி சரண்! என்னும் அடியோர்க்குப்
பற்று அது ஆய பாசுபதன் சேர் பதி என்பர்
பொந்திகழ் மாடத்து ஒளிகள் நிலாவும் புறவமே.

[6]
எண் திசையோர் அஞ்சிடு வகை கார் சேர் வரை என்ன,
கொண்டு எழு கோல முகில் போல், பெரிய கரிதன்னைப்
பண்டு உரிசெய்தோன் பாவனை செய்யும் பதி என்பர்
புண்டரிகத்தோன் போல் மறையோர் சேர் புறவமே.

[7]
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
துரக்கும் செந்தீப் போல் அமர் செய்யும் தொழில் மேவும்
அரக்கன் திண்தோள் அழிவித்தான், அக் காலத்தில்;
புரக்கும் வேந்தன்; சேர்தரு மூதூ புறவமே.

[8]
மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும்,
மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு
ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம் என்பர்
பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.

[9]
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்;
மெய் அல தேரர், உண்டு, இலை என்றே நின்றே தம்
கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர்
பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.

[10]
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும் புறவத்து
மன்னிய ஈசன் சேவடி நாளும் பணிகின்ற
தன் இயல்பு இல்லாச் சண்பையர்கோன்-சீர்ச் சம்பந்தன்-
இன் இசைஈர்-ஐந்து ஏத்த வல்லோர்கட்கு இடர் போமே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.084   பெண் இயல் உருவினர், பெருகிய  
பண் - சாதாரி   (திருத்தலம் திருப்புறவம் ; (திருத்தலம் அருள்தரு திருநிலைநாயகி உடனுறை அருள்மிகு பிரமபுரீசர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்
கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர்
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி
புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே.

[1]
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை முடியினர்
அக்கு உடை வடமும் ஒர் அரவமும் அலர் அரைமிசையினில்
திக்கு உடை மருவிய உருவினர், திகழ் மலைமகளொடும்
புக்கு உடன் உறைவது புதுமலர் விரை கமழ் புறவமே.

[2]
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை, உமை ஒரு-
பங்கு இயல் திரு உரு உடையவர்; பரசுவொடு இரலை மெய்
தங்கிய கரதலம் உடையவர்; விடையவர்; உறைபதி
பொங்கிய பொருகடல் கொள, அதன்மிசை உயர் புறவமே.

[3]
மாதவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை,
மேதகு திருவடி இறை உற, உயிர் அது விலகினார்
சாதக உரு இயல் சுரன் இடை, உமை வெரு உற, வரு
போதக உரி-அதள் மருவினர்; உறை பதி-புறவமே.

[4]
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர் கடிமதில்
தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி
ஓமமொடு உயர்மறை, பிற இயவகைதனொடு, ஒளி, கெழு
பூமகள், அலரொடு, புனல்கொடு, வழிபடு புறவமே.

[5]
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
பின்னையர், நடு உணர் பெருமையர், திருவடி பேணிட,
முன்னைய முதல்வினை அற அருளினர் உறை முது பதி
புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே.

[6]
வரி தரு புலி அதள் உடையினர், மழு எறி படையினர்
பிரிதரு நகுதலைவடம் முடிமிசை அணி பெருமையர்,
எரிதரும் உருவினர், இமையவர் தொழுவது ஒர் இயல்பினர்
புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே.

[7]
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை வலிசெயும்
நிசிசரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிவு உற
ஒசிதர ஒருவிரல் நிறுவினர், ஒளி வளர் வெளிபொடி
பொசிதரு திரு உரு உடையவர், உறை பதி புறவமே.

[8]
தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய்தவிசினில்
ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வு உடை ஒருவனும்,
வானகம் வரை அகம் மறிகடல் நிலன் எனும் எழுவகைப்
போனகம் மருவினன், அறிவு அரியவர் பதி புறவமே.

[9]
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர் அன துகிலினர்
பாசுர வினை தரு பளகர்கள், பழி தரு மொழியினர்
நீசரை விடும், இனி! நினைவு உறும் நிமலர்தம் உறைபதி,
பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி, புறவமே!

[10]
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை,
வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்-
ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும்
நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே.

[11]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000