சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
திருமுறை pann திருநேரிசை:கொல்லி
4.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவையாறு செம்பொன்சோதீசுரர் அறம்வளர்த்தநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=vYtWwNzg12A
4.041   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொய் விராம் மேனி தன்னைப்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருச்சோற்றுத்துறை தொலையாச்செல்வர் ஒப்பிலாம்பிகை)
Audio: https://www.youtube.com/watch?v=Aa6ZjiSja28
4.042   திருநாவுக்கரசர்   தேவாரம்   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்துருத்தி வேதேசுவரர் முகிழாம்பிகையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=k69FBvKLoqk
4.043   திருநாவுக்கரசர்   தேவாரம்   மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி   (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc
4.045   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத
பண் - திருநேரிசை:கொல்லி   (திருவொற்றியூர் மாணிக்கத்தியாகர் வடிவுடையம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=zy7SU8mdaHI

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.039   குண்டனாய்ச் சமணரோடே கூடி நான்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவையாறு ; (திருத்தலம் அருள்தரு அறம்வளர்த்தநாயகியம்மை உடனுறை அருள்மிகு செம்பொன்சோதீசுரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
குண்டனாய்ச் சமணரோடே கூடி நான் கொண்ட மாலைத்
துண்டனே! சுடர் கொள் சோதீ! தூ நெறி ஆகி நின்ற
அண்டனே! அமரர் ஏறே! திரு ஐயாறு அமர்ந்த தேனே!
தொண்டனேன், தொழுது உன் பாதம் சொல்லி, நான் திரிகின்றேனே.

[1]
பீலி கை இடுக்கி, நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி,
வாலிய தறிகள் போல மதி இலார் பட்டது என்னே!
வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே!

[2]
தட்டு இடு சமணரோடே தருக்கி, நான் தவம் என்று எண்ணி,
ஒட்டிடு மனத்தினீரே! உம்மை யான் செய்வது என்னே!
மொட்டு இடு கமலப் பொய்கைத் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு
ஒட்டிடும் உள்ளத்தீரே! உம்மை நான் உகந்திட்டேனே.

[3]
பாசிப் பல் மாசு மெய்யர் பலம் இலாச் சமணரோடு
நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன்;
தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே.

[4]
கடுப் பொடி அட்டி மெய்யில், கருதி ஓர் தவம் என்று எண்ணி,
வடுக்களோடு இசைந்த நெஞ்சே! மதி இலி பட்டது என்னே!
மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை
அடுத்து நின்று உன்னு, நெஞ்சே! அருந்தவம் செய்த ஆறே!

[5]
துறவி என்று அவம் அது ஓரேன்; சொல்லிய சொலவு செய்து(வ்)
உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி;
நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை
மறவு இலா நெஞ்சமே! நல்மதி உனக்கு அடைந்தஆறே!

[6]
பல் உரைச் சமணரோடே பலபல காலம் எல்லாம்
சொல்லிய சொலவு செய்தேன்; சோர்வன், நான் நினைந்தபோது;
மல்லிகை மலரும் சோலைத் திரு ஐயாறு அமர்ந்த தேனை!
எல்லியும் பகலும் எல்லாம் நினைந்த போது இனியஆறே!

[7]
மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக,-
எண் இலாச் சமணரோடே இசைந்தனை, ஏழை நெஞ்சே!-
தெண் நிலா எறிக்கும் சென்னித் திரு ஐயாறு அமர்ந்த தேனைக்
கண்ணினால் காணப் பெற்றுக் கருதிற்றே முடிந்தஆறே!

[8]
குருந்தம் அது ஒசித்த மாலும், குலமலர் மேவினானும்,
திருந்து நல்-திரு வடீயும் திருமுடி காணமாட்டார்
அருந்தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனைப்
பொருந்தி நின்று உன்னு, நெஞ்சே! பொய் வினை மாயும் அன்றே.

[9]
அறிவு இலா அரக்கன் ஓடி, அருவரை எடுக்கல் உற்று,
முறுகினான்; முறுகக் கண்டு மூதறி வாளன் நோக்கி
நிறுவினான், சிறுவிர(ல்)லால்; நெரிந்து போய் நிலத்தில் வீழ,
அறிவினால் அருள்கள் செய்தான், திரு ஐயாறு அமர்ந்த தேனே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.041   பொய் விராம் மேனி தன்னைப்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருச்சோற்றுத்துறை ; (திருத்தலம் அருள்தரு ஒப்பிலாம்பிகை உடனுறை அருள்மிகு தொலையாச்செல்வர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி
மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா!
ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன்
செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே!

[1]
கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா;
எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை-
அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே.

[2]
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்!
பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[3]
கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம்
இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்-
பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்-
துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே.

[4]
பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
எந்தையே! ஏகமூர்த்தி! என்று நின்று ஏத்தமாட்டேன்;
பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று
சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே.

[5]
பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன்
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே!
ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத்
தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே.

[6]
கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன,
எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ!
முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி,
செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே.

[7]
அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா;
வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்!
அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி-
செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே.

[8]
ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[9]
மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில்
பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்!
கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க,
செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.042   பொருத்திய குரம்பை தன்னைப் பொருள்  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருத்துருத்தி ; (திருத்தலம் அருள்தரு முகிழாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வேதேசுவரர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா;
இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்!
ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த
துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே!

[1]
சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற
இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ!
அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த
சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[2]
உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ!
கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து,
பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும்
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.!

[3]
ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ,
வான் தலைத் தேவர் கூடி,வானவர்க்கு இறைவா! என்னும்
தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே!

[4]
உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம்
இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ!
கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற
சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[5]
அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள்
பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த
வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற
துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[6]
பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்;
வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச்
சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே!

[7]
சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா;
தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ!
சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும்
தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

[8]
குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்!
விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே!

[9]
பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை
கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த
துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.043   மறை அது பாடிப் பிச்சைக்கு  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார்
பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும்
கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே.

[1]
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும்
பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக்
காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[2]
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த,
பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார்
கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே.

[3]
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும்
வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக்
காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[4]
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த
கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.

[5]
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய்,
தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற
காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே.

[6]
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார்
பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார்
கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே.

[7]
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி
கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.

[8]
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக்
கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார்
ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள்
ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே.

[9]
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள்
இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.045   வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத  
பண் - திருநேரிசை:கொல்லி   (திருத்தலம் திருவொற்றியூர் ; (திருத்தலம் அருள்தரு வடிவுடையம்மை உடனுறை அருள்மிகு மாணிக்கத்தியாகர் திருவடிகள் போற்றி )

சிவானந்த முதிர்வு சிவனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் போற்றமாட்டேன்
வெள்ளத்தைச் சடையில் வைத்த வேத கீதன் தன் பாதம்
மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத் தீயால்
கள்ளத்தைக் கழிய நின்றார் காயத்துள் கலந்து நின்று(வ்)
உள்ளத்துள் ஒளியும் ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[1]
வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா; வானவர் இறைவன் நின்று,
புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில்,
அசிர்ப்பு எனும் அருந்தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி
உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[2]
தானத்தைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீா
வானத்தை வணங்க வேண்டில் வம்மின்கள், வல்லீர் ஆகில்!
ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார்
ஊனத்தை ஒழிப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[3]
காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே,
சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு தன்னை
ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு
ஓமத்துள் ஒளி அது ஆகும், ஒற்றியூர் உடைய கோவே.

[4]
சமையம் மேல் ஆறும் ஆகி, தான் ஒரு சயம்பு ஆகி,
இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன்;
கமையினை உடையர் ஆகிக் கழல் அடி பரவுவாருக்கு
உமை ஒரு பாகர் போலும்-ஒற்றியூர் உடைய கோவே.

[5]
ஒருத்தி தன் தலைச் சென்றாளைக் கரந்திட்டான்; உலகம் ஏத்த
ஒருத்திக்கு நல்லன் ஆகி, மறுப் படுத்து ஒளித்தும், ஈண்டே
ஒருத்தியைப் பாகம் வைத்தான்; உணர்வினால் ஐயம் உண்ணி;
ஒருத்திக்கும் நல்லன் அல்லன் ஒற்றியூர் உடைய கோவே.

[6]
பிணம் உடை உடலுக்கு ஆகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வு எனும் போகம் வேண்டா; போக்கல் ஆம், பொய்யை நீங்க;
நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு
உணர்வினோடு இருப்பர் போலும், ஒற்றியூர் உடைய கோவே.

[7]
பின்னு வார் சடையான் தன்னைப் பிதற்றிலாப் பேதைமார்கள்
துன்னுவார், நரகம் தன்னுள்;-தொல்வினை தீர வேண்டின்,
மன்னு வான் மறைகள் ஓதி, மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி,
உன்னுவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[8]
முள்குவார் போகம் வேண்டின் முயற்றியால்; இடர்கள் வந்தால்
எள்குவார்; எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார்
பள்குவார் பத்தர் ஆகிப் பாடியும் ஆடியும் நின்று
உள்குவார் உள்ளத்து உள்ளார், ஒற்றியூர் உடைய கோவே.

[9]
வெறுத்து உகப் புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும்; நெஞ்சே!
மறுத்து உக, ஆர்வச் செற்றக் குரோதங்கள் ஆன மாய!
பொறுத்து உகப் புட்பகத்தேர் உடையானை அடர ஊன்றி
ஒறுத்து உகந்து அருள்கள் செய்தார், ஒற்றியூர் உடைய கோவே.

[10]
Back to Top
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000