குன்றம் எறிந்தாய் குரை கடலில் சூர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய் என்றும் இளையாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் துறை. 1
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். 2
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை. 3
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா - முன்னம் பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். 4
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே. 5
அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும் வெஞ்ச மரில்அஞ்சல்என வேல்தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன் றோதுவார் முன். 6
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். 7
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. 8
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்தன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள்தோறும் சாற்றினால் முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான்நினைத்த எல்லாம் தரும். 10
|
[ 2]
|