சிவய.திருக்கூட்டம்
sivaya.org



This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

முதல் ஆயிரம்   பெரியாழ்வார்  
திருப்பல்லாண்டு -  

Songs from 1.0 to 12.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   ஆண்டாள்  
திருப்பாவை -  

Songs from 474.0 to 503.0   ( திருவில்லிபுத்தூர் )
முதல் ஆயிரம்   திருமழிசை ஆழ்வார்  
திருச்சந்த விருத்தம் -  

Songs from 752.0 to 871.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருமாலை -  

Songs from 872.0 to 916.0   ( )
முதல் ஆயிரம்   தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்  
திருப்பள்ளி எழுச்சி -  

Songs from 917.0 to 926.0   ( )
முதல் ஆயிரம்   திருப்பாணாழ்வார்  
அமலன் ஆதிபிரான் -  

Songs from 927.0 to 936.0   ( உறையூர் )
முதல் ஆயிரம்   மதுரகவி ஆழ்வார்  
கண்ணி நுண் சிறுத்தாம்பு -  

Songs from 937.0 to 947.0   ( )
(937.0)    
Pages:    1    2  Next
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.



[1.0]
அடியோமோடும் நின்னொடும் பிரிவு இன்றி
ஆயிரம் பல்லாண்டு
விடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே



[2.0]
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினிற் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள்
இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[3.0]
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி
வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ
நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து
பல்லாண்டு கூறுமினே



[4.0]
Go to Top
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது
ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
லாயிரத்தாண்டு என்மினே



[5.0]
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திரு
வோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி
அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
தாண்டு என்று பாடுதுமே



[6.0]
தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
திகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[7.0]
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை
வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப்
பல்லாண்டு கூறுவனே



[8.0]
Go to Top
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன
சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
வோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே



[9.0]
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
யோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையிற்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப்
பல்லாண்டு கூறுதுமே



[10.0]
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்
கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும்
உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று
நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப்
பல்லாண்டு கூறுவனே



[11.0]
பல்லாண்டு என்று பவித்திரனைப் பர
மேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டு
சித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ
நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து
ஏத்துவர் பல்லாண்டே



[12.0]
Go to Top
Audio: https://www.youtube.com/watch?v=PxeeauHz5CQ
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய்



[474.0]
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையிற் துயின்ற பரமன் அடி பாடி
நெய் உண்ணோம் பால் உண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலர் இட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆம்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து-ஏலோர் எம்பாவாய்



[475.0]
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து- ஏலோர் எம்பாவாய்



[476.0]
Go to Top
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[477.0]
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்



[478.0]
புள்ளும் சிலம்பின காண் புள்-அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேர்-அரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேர்-அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்



[479.0]
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சு- அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர்-அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற-ஏலோர் எம்பாவாய்



[480.0]
Go to Top
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண் மிக்கு உள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள்- ஏலோர் எம்பாவாய்



[481.0]
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்



[482.0]
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திற-ஏலோர் எம்பாவாய்



[483.0]
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்



[484.0]
Go to Top
கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்



[485.0]
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமைபாடிப் போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போது-அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து-ஏலோர் எம்பாவாய்



[486.0]
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கற்பொடிக் கூறை வெண்பற் தவத்தவர்
தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு-ஏலோர் எம்பாவாய்



[487.0]
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடு-ஏலோர் எம்பாவாய்



[488.0]
Go to Top
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு-ஏலோர் எம்பாவாய்



[489.0]
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உகந்து-ஏலோர் எம்பாவாய்



[490.0]
உந்து மத களிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தர்மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[491.0]
குத்து விளக்கு எரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய்
மைத் தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவு-ஏலோர் எம்பாவாய்



[492.0]
Go to Top
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டுஏலோர் எம்பாவாய்



[493.0]
ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[494.0]
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்து-ஏலோர் எம்பாவாய்



[495.0]
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள்-ஏலோர் எம்பாவாய்



[496.0]
Go to Top
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு-ஏலோர் எம்பாவாய்



[497.0]
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பு என்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்



[498.0]
மாலே மணிவண்ணா மார்கழி நீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள்-ஏலோர் எம்பாவாய்



[499.0]
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்று அனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்து-ஏலோர் எம்பாவாய்



[500.0]
Go to Top
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறை- ஏலோர் எம்பாவாய்



[501.0]
சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று-ஏலோர் எம்பாவாய்



[502.0]
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள்-திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட-ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண்-திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்



[503.0]
பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீ நிலாயது ஒன்றும் ஆகி வேறு வேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?



[752.0]
Go to Top
ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்
வேறு வேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே



[753.0]
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனே
ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி அந்தரத்து அணைந்து நின்று
ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?



[754.0]
மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்
மூன்று மூர்த்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றுமாய் துளக்கம் இல் விளக்கமாய்
ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே



[755.0]
நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்
ஒன்றி உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று
என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய் நின் உந்திவாய்
அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?



[756.0]
Go to Top
நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை
நாகம் ஏந்தும் ஆக மாகம் மாகம் ஏந்து வார்புனல்
மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து
ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே



[757.0]
ஒன்று இரண்டு மூர்த்தியாய் உறக்கமோடு உணர்ச்சியாய்
ஒன்று இரண்டு காலம் ஆகி வேலை ஞாலம் ஆயினாய்
ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே
ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே?



[758.0]
ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே



[759.0]
தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்
நீதியால் வணங்கு பாத நின்மலா நிலாய சீர்
வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே



[760.0]
Go to Top
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே



[761.0]
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?



[762.0]
உலகுதன்னை நீ படைத்தி உள் ஒடுக்கி வைத்தி மீண்டு
உலகுதன்னுளே பிறத்தி ஓரிடத்தை அல்லையால்
உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி ஆதலால்
உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?



[763.0]
இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும் இட்டிடைப்
பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்
பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்
நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?



[764.0]
Go to Top
தூய்மை யோகம் ஆயினாய் துழாய்-அலங்கல் மாலையாய்
ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற ஆதிதேவ நின்
நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல ஆகிலும்
சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?



[765.0]
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே
தங்குகின்ற தன்மையாய் தடங்கடற் பணத்தலை
செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்
சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?



[766.0]
தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்
நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும் நீடு இரும்
கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா
மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நின்தன் மாட்சியே



[767.0]
ஏக மூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மை சேர்
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண் இல் மூர்த்தியாய்
நாக மூர்த்தி சயனமாய் நலங் கடற் கிடந்து மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே



[768.0]
Go to Top
விடத்த வாய் ஒர் ஆயிரம் இராயிரம் கண் வெந்தழல்
விடுத்து வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்
தொடுத்து மேல் விதானமாய பௌவ-நீர் அராவணைப்
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல் வேலைவண்ணனே



[769.0]
புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய் அது அன்றியும்
புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்
புள்ளை ஊர்தி ஆதலால் அது என்கொல் மின் கொள் நேமியாய்
புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?



[770.0]
கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து வேலை-நீர்
பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்
பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா
ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே



[771.0]
அரங்கனே தரங்க நீர் கலங்க அன்று குன்று சூழ்
மரங்கள் தேய மாநிலம் குலுங்க மாசுணம் சுலாய்
நெருங்க நீ கடைந்தபோது நின்ற சூரர் என் செய்தார்?
குரங்கை ஆள் உகந்த எந்தை கூறு தேற வேறு இதே



[772.0]
Go to Top
பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்
உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே
வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய் கலந்த சீர்ப்
புண்டரீகப் பாவை சேரும் மார்ப பூமிநாதனே



[773.0]
வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்
ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய் உலாய சீர்
நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே?



[774.0]
கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
சிங்கமாய தேவதேவ தேன் உலாவு மென் மலர்-
மங்கை மன்னி வாழும் மார்ப ஆழி மேனி மாயனே



[775.0]
வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்
உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
இரத்தி நீ-இது என்ன பொய்?-இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே



[776.0]
Go to Top
ஆணினோடு பெண்ணும் ஆகி அல்லவோடு நல்லவாய்
ஊணொடு ஓசை ஊறும் ஆகி ஒன்று அலாத மாயையாய்
பூணி பேணும் ஆயன் ஆகி பொய்யினோடு மெய்யுமாய்
காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே



[777.0]
விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்
மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?



[778.0]
படைத்த பார் இடந்து அளந்து அது உண்டு உமிழ்ந்து பௌவ நீர்
படைத்து அடைத்து அதிற் கிடந்து முன் கடைந்த பெற்றியோய்
மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலன்-ஊர் புகப்
படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே



[779.0]
பரத்திலும் பரத்தை ஆதி பௌவ நீர் அணைக் கிடந்து
உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து அது அன்றியும்
நரத்திலும் பிறத்தி நாத ஞானமூர்த்தி ஆயினாய்
ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?



[780.0]
Go to Top
வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே
தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?



[781.0]
காலநேமி காலனே கணக்கு இலாத கீர்த்தியாய்
ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே
வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர நின்
பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே



[782.0]
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அங்கு அரங்க வெஞ்சரம் துரந்த ஆதி நீ
இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்பபாதன் அல்லையே?



[783.0]
மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து
பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்
நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப்
பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே?



[784.0]
Go to Top
ஆதி ஆதி ஆதி நீ ஒர் அண்டம் ஆதி ஆதலால்
சோதியாத சோதி நீ அது உண்மையில் விளங்கினாய்
வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்
ஆதி ஆகி ஆயன் ஆய மாயம் என்ன மாயமே?



[785.0]
அம்பு உலாவு மீனும் ஆகி ஆமை ஆகி ஆழியார்
தம்பிரானும் ஆகி மிக்கது அன்பு மிக்கு அது அன்றியும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே



[786.0]
ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்
சாடு உதைத்து ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்
வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பால் அமுதுசெய்து
ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ?



[787.0]
காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூங் குருந்தம்
சாய்த்து மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்
ஆய்ச்சி பாலை உண்டு மண்ணை உண்டு வெண்ணெய் உண்டு பின்
பேய்ச்சி பாலை உண்டு பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா



[788.0]
Go to Top
கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே
குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண தண்துழாய்
வடம் கலந்த மாலை மார்ப காலநேமி காலனே



[789.0]
வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய் அது அன்றியும்
வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி வேலை சூழ்
வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ
வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே?



[790.0]
ஆனை காத்து ஒர் ஆனை கொன்று அது அன்றி ஆயர்-பிள்ளையாய்
ஆனை மேய்த்தி ஆனெய் உண்டி அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே



[791.0]
ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?
மாய மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்
மாய மாயம் ஆக்கினாய் உன் மாயம் முற்றும் மாயமே



[792.0]
Go to Top
வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்
கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை
ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை
ஏறு சென்று அடர்த்த ஈச பேசு கூசம் இன்றியே



[793.0]
வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து உருத்த மா
கஞ்சனைக் கடிந்து மண் அளந்துகொண்ட காலனே
வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்
அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?



[794.0]
பாலின் நீர்மை செம்பொன் நீர்மை பாசியின் பசும் புறம்
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்
நீல நீர்மை என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்
மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?



[795.0]
மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை நின் தமர்
கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம்
புண்ணியா புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே



[796.0]
Go to Top
தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்
கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்
நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும் நாயினேன்
வீடு பெற்று இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே



[797.0]
காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண விண்ணின் நாதனே
நீர் இடத்து அராவணைக் கிடத்தி என்பர் அன்றியும்
ஓர் இடத்தை அல்லை எல்லை இல்லை என்பர் ஆதலால்
சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சுமா சொலே



[798.0]
குன்றில் நின்று வான் இருந்து நீள் கடற் கிடந்து மண்
ஒன்று சென்று அது ஒன்றை உண்டு அது ஒன்று இடந்து பன்றியாய்
நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து அவர்க்கு
அன்று தேவு அமைத்து அளித்த ஆதிதேவன் அல்லையே?



[799.0]
கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்
உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்
நண்டை உண்டு நாரை பேர வாளை பாய நீலமே
அண்டை கொண்டு கெண்டை மேயும் அந் தண் நீர் அரங்கமே



[800.0]
Go to Top
வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ முன் ஒர் நாள்
திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே



[801.0]
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொன்-இடம்
பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்
அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே



[802.0]
பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்
பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்
சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்
அற்ற பற்றர் சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே



[803.0]
மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி முக்கணான்
கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து
ஓட வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்
பீடு கோயில் கூடு நீர் அரங்கம் என்ற பேரதே



[804.0]
Go to Top
இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்
மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு
அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே



[805.0]
மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்
பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து அது அன்றியும்
உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்
பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?



[806.0]
இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக
கலங்க அன்று சென்று கொன்று வென்றி கொண்ட வீரனே
விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்
வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?



[807.0]
சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்
அங்கம் மங்க அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்
கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்
பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே



[808.0]
Go to Top
மரம் கெட நடந்து அடர்த்து மத்த யானை மத்தகத்து
உரம் கெடப் புடைத்து ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா
துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத வேதியர்
வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?



[809.0]
சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா
காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை
காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே



[810.0]
செழுங் கொழும் பெரும்பனி பொழிந்திட உயர்ந்த வேய்
விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று
எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்
செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?



[811.0]
நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே



[812.0]
Go to Top
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்கொடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும்
இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே



[813.0]
நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்
சென்று இருந்து தீவினைகள் தீர்த்த தேவதேவனே
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்
நின்று இருந்து வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?



[814.0]
நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே



[815.0]
நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே



[816.0]
Go to Top
இன்று சாதல் நின்று சாதல் அன்றி யாரும் வையகத்து
ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும் நீசர் என்கொலோ
அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்
சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?



[817.0]
சண்ட மண்டலத்தின் ஊடு சென்று வீடு பெற்று மேல்
கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்
புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து
உண்டு நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ



[818.0]
முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்
மத்தராய் மயங்குகின்றது இட்டு அதில் இறந்து போந்து
எத்திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை உய்குறில்
தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ



[819.0]
காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்
பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை
ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள் எம் ஆதிபாற்
பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே



[820.0]
Go to Top
குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்
பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற
வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே



[821.0]
வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு
இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்
முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்
கண்டு நாணி வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே



[822.0]
போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி அன்றியும்
போது தங்கு நான்முகன் மகன் அவன் மகன் சொலில்
மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி என்று வேத நூல்
ஓதுகின்றது உண்மை அல்லது இல்லை மற்று உரைக்கிலே



[823.0]
மரம் பொதச் சரம் துரந்து வாலி வீழ முன் ஒர் நாள்
உரம் பொதச் சரம் துரந்த உம்பர்-ஆளி எம்பிரான்
வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது வானம் ஆளிலும்
நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே



[824.0]
Go to Top
அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்
செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்
மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்
பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே



[825.0]
ஒன்றி நின்று நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்
நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி உள்ளம் தூயராய்ச்
சென்று சென்று தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்
அன்றி எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே?



[826.0]
புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து
நன் புல வழி திறந்து ஞான நற் சுடர்கொளீஇ
என்பு இல் எள்கி நெஞ்சு உருகி உள் கனிந்து எழுந்தது ஓர்
அன்பில் அன்றி ஆழியானை யாவர் காண வல்லரே?



[827.0]
எட்டும் எட்டும் எட்டுமாய் ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை
எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று அவன் பெயர்
எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே



[828.0]
Go to Top
சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்
நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்
ஆர்வமோடு இறைஞ்சி நின்று அவன் பேர் எட்டு எழுத்துமே
வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே



[829.0]
பத்தினோடு பத்துமாய் ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்
பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்
பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்
பத்தராம் அவர்க்கு அலாது முத்தி முற்றல் ஆகுமே?



[830.0]
வாசி ஆகி நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்
நாசம் ஆகி நாள் உலப்ப நன்மை சேர் பனங்கனிக்கு
வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய் கழற்கு
ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே?



[831.0]
கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து இராமனாய்
மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து வேங்கடம்
அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ



[832.0]
Go to Top
எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்
முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்
பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு
எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே



[833.0]
மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய் பொலன் கழல்
விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்
எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக்
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே



[834.0]
பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு
அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல் ஆழியான்?
தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்
என் திறத்தில் என்கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே?



[835.0]
நச்சு-அரா அணைக்கிடந்த நாத பாத-போதினில்
வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்
மெய்த்தன் வல்லை ஆதலால் அறிந்தனன் நின் மாயமே
உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே



[836.0]
Go to Top
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே
கோடு நீடு கைய செய்ய பாதம் நாளும் உள்ளினால்
வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே



[837.0]
நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்
நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்
கற்ற பெற்றியால் வணங்கு பாத நாத வேத நின்
பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன் உரைக்கிலே



[838.0]
வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்
அள்ளலாக் கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்
உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்
வள்ளலாரை அன்றி மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே?



[839.0]
பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அருச்சுனன்
தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று வென்றிசேர்
மாரதர்க்கு வான் கொடுத்து வையம் ஐவர் பாலதாம்
சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே?



[840.0]
Go to Top
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்கள் ஐந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனித நின்
இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே



[841.0]
பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு
எண் இலா அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்
கண் அலால் ஒர் கண் இலேன் கலந்த சுற்றம் மற்று இலேன்
எண் இலாத மாய நின்னை என்னுள் நீக்கல் என்றுமே



[842.0]
விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்
கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய வேலை-நீர்
படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நின்தனக்கு
அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே



[843.0]
சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு அரங்கவாணனே
கரும்பு இருந்த கட்டியே கடல் கிடந்த கண்ணனே
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே



[844.0]
Go to Top
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே



[845.0]
அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை
தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ
விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்
கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன் எம் அண்ணலே



[846.0]
வரம்பு இலாத மாய மாய வையம் ஏழும் மெய்ம்மையே
வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்
வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்
பொந்துமா திருந்த நீ வரம்செய் புண்டரீகனே



[847.0]
வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்
கைய செய்ய போதில் மாது சேரும் மார்ப நாதனே
ஐயில் ஆய ஆக்கை-நோய் அறுத்து வந்து நின் அடைந்து
உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே



[848.0]
Go to Top
மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்
துறந்து நின்கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்
பிறந்து இறந்து பேர் இடர்ச் சுழிக்கணின்று நீங்குமா
மறந்திடாது மற்று எனக்கு மாய நல்க வேண்டுமே



[849.0]
காட்டி நான் செய் வல்வினைப் பயன்தனால் மனந்தனை
நாட்டி வைத்து நல்ல-அல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டது அன்றி என்னது ஆவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே



[850.0]
பிறப்பினோடு பேர் இடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது
இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றுமா
பெறற்கு அரிய நின்ன பாத-பத்தி ஆன பாசனம்
பெறற்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே



[851.0]
இரந்து உரைப்பது உண்டு வாழி ஏம நீர் நிறத்து அமா
வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில் மன்னு சீர்
பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம்
நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே



[852.0]
Go to Top
விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து
உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்ப்
பள்ளி மாய பன்றி ஆய வென்றி வீர குன்றினால்
துள்ளுநீர் வரம்பு செய்த தோன்றல் ஒன்று சொல்லிடே



[853.0]
திருக் கலந்து சேரும் மார்ப தேவதேவ தேவனே
இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா
கருக் கலந்த காளமேக மேனி ஆய நின் பெயர்
உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே



[854.0]
கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே
கிடந்து இருந்து நின்று இயங்கு போதும் நின்ன பொற்கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே



[855.0]
மண்ணை உண்டு உமிழ்ந்து பின் இரந்து கொண்டு அளந்து மண்
கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய்
பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்
கண்ண நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே



[856.0]
Go to Top
கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று
அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்
தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க அன்று குன்றம் முன்
பொறுத்த நின் புகழ்க்கு அலால் ஒர் நேசம் இல்லை நெஞ்சமே



[857.0]
காய் சினத்த காசி மன்னன் வக்கரன் பவுண்டிரன்
மாசினத்த மாலி மான் சுமாலி கேசி தேனுகன்
நாசம் உற்று வீழ நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்
நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே



[858.0]
கேடு இல் சீர் வரத்தினாய்க் கெடும் வரத்து அயன் அரன்
நாடினோடு நாட்டம்-ஆயிரத்தன் நாடு நண்ணினும்
வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்
கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே?



[859.0]
சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய் சுருங்கியும்
பெருக்குவாரை இன்றியே பெருக்க மெய்து பெற்றியோய்
செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று
இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த யானும் ஏத்தினேன்



[860.0]
Go to Top
தூயனாயும் அன்றியும் சுரும்பு உலாவு தண் துழாய்
மாய நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்
நீயும் நின் குறிப்பினிற் பொறுத்து நல்கு வேலை-நீர்ப்
பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே



[861.0]
வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும் மாறில் போர்
செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும் வந்து உனை
எய்தல் ஆகும் என்பர் ஆதலால் எம் மாய நாயினேன்
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால-நாதனே



[862.0]
வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி
மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து அது அன்றியும்
மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே



[863.0]
சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்
புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட
அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்
நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு வாழி நெஞ்சமே



[864.0]
Go to Top
ஈனமாய எட்டும் நீக்கி ஏதம் இன்றி மீதுபோய்
வானம் ஆள வல்லையேல் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே
ஞானம் ஆகி ஞாயிறு ஆகி ஞால முற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே



[865.0]
அத்தன் ஆகி அன்னை ஆகி ஆளும் எம் பிரானுமாய்
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்
எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே?



[866.0]
மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப அன்று இலங்கை
நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார்
வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால் நமன்
கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே?



[867.0]
அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை
வைத்த சிந்தை வைத்த ஆக்கை மாற்றி வானில் ஏற்றுவான்
அச்சுதன் அனந்த கீர்த்தி ஆதி அந்தம் இல்லவன்
நச்சு நாகனைக் கிடந்த நாதன் வேத கீதனே



[868.0]
Go to Top
சொல்லினும் தொழிற்கணும் தொடக்கு அறாத அன்பினும்
அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்
அல்லி நாள்-மலர்க் கிழத்தி நாத பாத-போதினைப்
புல்லி உள்ளம் விள்வு இலாது பூண்டு மீண்டது இல்லையே



[869.0]
பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே



[870.0]
இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே



[871.0]
காவலிற் புலனை வைத்து
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம்
நமன்-தமர் தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த
முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்க மா நகருளானே



[872.0]
Go to Top
பச்சை மா மலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச் சுவை தவிர யான் போய்
இந்திர-லோகம் ஆளும்
அச் சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகருளானே



[873.0]
வேத நூற் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றதிற் பதினையாண்டு
பேதை பாலகன் அது ஆகும்
பிணி பசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகருளானே



[874.0]
மொய்த்த வல்வினையுள் நின்று
மூன்று எழுத்து உடைய பேரால்
கத்திரபந்தும் அன்றே
பராங்கதி கண்டு கொண்டான்
இத்தனை அடியர் ஆனார்க்கு
இரங்கும் நம் அரங்கன் ஆய
பித்தனைப் பெற்றும் அந்தோ
பிறவியுள் பிணங்குமாறே



[875.0]
பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்
பெரியது ஓர் இடும்பை பூண்டு
உண்டு இராக் கிடக்கும் அப்போது
உடலுக்கே கரைந்து நைந்து
தண் துழாய்-மாலை மார்பன்
தமர்களாய்ப் பாடி ஆடி
தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத்
தொழும்பர்சோறு உகக்குமாறே



[876.0]
Go to Top
மறம் சுவர் மதில் எடுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம்
புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவர் ஆகி நின்ற
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
புறஞ் சுவர்க் கோலஞ் செய்து
புள் கௌவக் கிடக்கின்றீரே



[877.0]
புலை-அறம் ஆகி நின்ற
புத்தொடு சமணம் எல்லாம்
கலை அறக் கற்ற மாந்தர்
காண்பரோ? கேட்பரோ தாம்?
தலை அறுப்பு உண்டும் சாவேன்
சத்தியம் காண்மின் ஐயா
சிலையினால் இலங்கை செற்ற
தேவனே தேவன் ஆவான்



[878.0]
வெறுப்பொடு சமணர் முண்டர்
விதி இல் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பு அரியனகள் பேசில்
போவதே நோயது ஆகி
குறிப்பு எனக்கு அடையும் ஆகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமம் கண்டாய்
அரங்க மா நகருளானே



[879.0]
மற்றும் ஓர் தெய்வம் உண்டே?
மதி இலா மானிடங்காள்
உற்றபோது அன்றி நீங்கள்
ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றம் மேல் ஒன்று அறியீர்
அவன் அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை
கழலிணை பணிமின் நீரே



[880.0]
Go to Top
நாட்டினான் தெய்வம் எங்கும்
நல்லது ஓர் அருள்தன்னாலே
காட்டினான் திருவரங்கம்
உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்
கெருடவா கனனும் நிற்கச்
சேட்டைதன் மடியகத்துச்
செல்வம் பார்த்து இருக்கின்றீரே



[881.0]
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர்
அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே அரக்கர்கோனைச்
செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில்
மதில்-திருவரங்கம் என்னா
கருவிலே திரு இலாதீர்
காலத்தைக் கழிக்கின்றீரே



[882.0]
நமனும் முற்கலனும் பேச
நரகில் நின்றார்கள் கேட்க
நரகமே சுவர்க்கம் ஆகும்
நாமங்கள் உடையன் நம்பி
அவனது ஊர் அரங்கம் என்னாது
அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்
கவலையுள் படுகின்றார் என்று
அதனுக்கே கவல்கின்றேனே



[883.0]
எறியும் நீர் வெறிகொள் வேலை
மாநிலத்து உயிர்கள் எல்லாம்
வெறிகொள் பூந்துளவ மாலை
விண்ணவர்கோனை ஏத்த
அறிவு இலா மனிசர் எல்லாம்
அரங்கம் என்று அழைப்பராகில்
பொறியில் வாழ் நரகம் எல்லாம்
புல் எழுந்து ஒழியும் அன்றே



[884.0]
Go to Top
வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீது அணவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திருவரங்கம் என்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும்சோற்றை
விலக்கி நாய்க்கு இடுமின் நீரே



[885.0]
மெய்யர்க்கே மெய்யன் ஆகும்
விதி இலா என்னைப் போலப்
பொய்யர்க்கே பொய்யன் ஆகும்
புட்கொடி உடைய கோமான்
உய்யப்போம் உணர்வினார்கட்கு
ஒருவன் என்று உணர்ந்த பின்னை
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்
அழகன் ஊர் அரங்கம் அன்றே



[886.0]
சூதனாய்க் கள்வனாகித்
தூர்த்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயற்கண் என்னும்
வலையுள் பட்டு அழுந்துவேனைப்
போதரே என்று சொல்லிப்
புந்தியுள் புகுந்து தன்பால்
ஆதரம் பெருக வைத்த
அழகன் ஊர் அரங்கம் அன்றே



[887.0]
விரும்பி நின்று ஏத்த மாட்டேன்
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம்
இறை-இறை உருகும் வண்ணம்
சுரும்பு அமர் சோலை சூழ்ந்த
அரங்க மா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டு என்
கண்ணினை களிக்குமாறே



[888.0]
Go to Top
இனி திரைத் திவலை மோத
எறியும் தண் பரவை மீதே
தனி கிடந்து அரசு செய்யும்
தாமரைக்கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க்
கண்ணனைக் கண்ட கண்கள்
பனி-அரும்பு உதிருமாலோ
என் செய்கேன் பாவியேனே?



[889.0]
குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித்
தென்திசை இலங்கை நோக்கிக்
கடல்-நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ
என் செய்கேன் உலகத்தீரே?



[890.0]
பாயும் நீர் அரங்கந் தன்னுள்
பாம்பு-அணைப் பள்ளிகொண்ட
மாயனார் திரு நன் மார்வும்
மரகத-உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும்
துவர்-இதழ்ப் பவள-வாயும்
ஆய சீர் முடியும் தேசும்
அடியரோர்க்கு அகலல் ஆமே?



[891.0]
பணிவினால் மனமது ஒன்றிப்
பவள-வாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழ மாட்டாத்
தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியின் ஆர் செம்பொன் ஆய
அருவரை அனைய கோயில்
மணி அனார் கிடந்தவாற்றை
மனத்தினால் நினைக்கல் ஆமே?



[892.0]
Go to Top
பேசிற்றே பேசல் அல்லால்
பெருமை ஒன்று உணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால்
அறியல் ஆவானும் அல்லன்
மாசற்றார் மனத்துளானை
வணங்கி நாம் இருப்பது அல்லால்
பேசத்தான் ஆவது உண்டோ?
பேதை நெஞ்சே நீ சொல்லாய்



[893.0]
கங்கையிற் புனிதம் ஆய
காவிரி நடுவுபாட்டுப்
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன்
கிடந்தது ஓர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்?
ஏழையேன் ஏழையேனே



[894.0]
வெள்ள-நீர் பரந்து பாயும்
விரி பொழில் அரங்கந் தன்னுள்
கள்வனார் கிடந்தவாறும்
கமல நன் முகமும் கண்டும்
உள்ளமே வலியை போலும்
ஒருவன் என்று உணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன்
கள்ளத்தே கழிக்கின்றாயே



[895.0]
குளித்து மூன்று அனலை ஓம்பும்
குறிகொள் அந்தணமை தன்னை
ஒளித்திட்டேன் என்கண் இல்லை
நின்கணும் பத்தன் அல்லேன்
களிப்பது என் கொண்டு? நம்பீ
கடல்வண்ணா கதறுகின்றேன்
அளித்து எனக்கு அருள்செய் கண்டாய்
அரங்க மா நகருளானே



[896.0]
Go to Top
போதெல்லாம் போது கொண்டு உன்
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டு உன்
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சம் அன்பு
கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
என் செய்வான் தோன்றினேனே?



[897.0]
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்
மரங்கள் போல் வலிய நெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்கு ஆட் செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றேனே



[898.0]
உம்பரால் அறியல் ஆகா
ஒளியுளார் ஆனைக்கு ஆகிச்
செம் புலால் உண்டு வாழும்
முதலைமேல் சீறி வந்தார்
நம் பரம் ஆயது உண்டே?
நாய்களோம் சிறுமை ஓரா
எம்பிராற்கு ஆட் செய்யாதே
என் செய்வான் தோன்றினேனே



[899.0]
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறுகின்றேன்
ஆர் உளர் களைகண்? அம்மா
அரங்க மா நகருளானே



[900.0]
Go to Top
மனத்தில் ஓர் தூய்மை இல்லை
வாயில் ஓர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித்
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே
பொன்னி சூழ் திருவரங்கா
எனக்கு இனிக் கதி என் சொல்லாய்?
என்னை ஆளுடைய கோவே



[901.0]
தவத்துளார் தம்மில் அல்லேன்
தனம் படைத்தாரில் அல்லேன்
உவர்த்த நீர் போல என்தன்
உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்
துவர்த்த செவ்வாயினார்க்கே
துவக்கு அறத் துரிசன் ஆனேன்
அவத்தமே பிறவி தந்தாய்
அரங்க மா நகருளானே



[902.0]
ஆர்த்து வண்டு அலம்பும் சோலை
அணி திரு அரங்கந் தன்னுள்
கார்த் திரள் அனைய மேனிக்
கண்ணனே உன்னைக் காணு
மார்க்கம் ஒன்று அறியமாட்டா
மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன்
மூர்க்கனேன் மூர்க்கனேனே



[903.0]
மெய் எல்லாம் போக விட்டு
விரிகுழலாரிற் பட்டுப்
பொய் எல்லாம் பொதிந்து கொண்ட
போழ்க்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன்
அருள் என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன்
பொய்யனேன் பொய்யனேனே



[904.0]
Go to Top
உள்ளத்தே உறையும் மாலை
உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக்
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம்
உடன் இருந்து அறிதி என்று
வெள்கிப்போய் என்னுள்ளே நான்
விலவு அறச் சிரித்திட்டேனே



[905.0]
தாவி அன்று உலகம் எல்லாம்
தலைவிளாக்கொண்ட எந்தாய்
சேவியேன் உன்னை அல்லால்
சிக்கெனச் செங்கண் மாலே
ஆவியே அமுதே என்தன்
ஆருயிர் அனைய எந்தாய்
பாவியேன் உன்னை அல்லால்
பாவியேன் பாவியேனே



[906.0]
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும்
மைந்தனே மதுர ஆறே
உழைக் கன்றே போல நோக்கம்
உடையவர் வலையுள் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது
ஒழிவதே உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி
அரங்கமா நகருளானே



[907.0]
தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ்
திருவரங்கத்துள் ஓங்கும்
ஒளியுளார் தாமே யன்றே
தந்தையும் தாயும் ஆவார்?
எளியது ஓர் அருளும் அன்றே
என் திறத்து? எம்பிரானார்
அளியன் நம் பையல் என்னார்
அம்மவோ கொடியவாறே



[908.0]
Go to Top
மேம் பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிக உணர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு
ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்பு அறத் தலை சிரைத்து உன்
கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்
சூழ் புனல் அரங்கத்தானே



[909.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 06 Aug 2026 02:15:30 +0000  
   

send corrections and suggestions to admin-at-sivaya.org or to this WhatsApp Group